

பாத்திமா அல் ஃபஹிரி
பெண்களுக்கும் கல்விக்கும் ஏழாம் பொருத்தம் என்று உலகமே சொல்லிக்கொண்டிருந்த காலத்தில் உலகின் முதல் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் பாத்திமா அல் ஃபஹிரி. வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இவர், பொ.ஆ.(கி.பி) 800இல் துனிசியாவில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே கல்வி மீதும் கட்டிடக் கலைகள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் பாத்திமா. இதனை அறிந்த அவருடைய தந்தை முகமது அல் ஃபஹிரி, அதற்கான அனைத்து உதவிகளையும் செய்து ஊக்கப்படுத்தினார்.
சில ஆண்டுகளிலேயே தந்தையும் கணவரும் இறந்துவிட, குடும்பத்தின் செல்வத்தையும் தனக்கான செல்வத்தையும் வைத்து என்ன செய்யலாம் எனத் தங்கை மரியத்துடன் பாத்திமா ஆலோசித்தார். கல்வியைப் போதிக்கும் ‘அல் க்ராவியின்’ எனும் பல்கலைக்கழகத்தை பாத்திமாவும் மக்கள் வழிபடுவதற்கான ‘அண்டலஸ்’ எனும் மசூதியை தங்கை மரியமும் உருவாக்கினர். பாத்திமா தன்னிடமிருந்த செல்வத்தை, உழைப்பை, நேரத்தைக் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் செலவழித்து மிகவும் நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் அழகியல் வாய்ந்த பல்கலைக்கழகத்தைக் கட்டி முடிக்கப் பாடுபட்டார்.