

நான் கீழ் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். எங்கள் வீட்டில் எவ்வளவு பொருளாதாரக் கஷ்டம் இருந்தாலும் பெற்றோர் எங்களை நல்ல முறையில் படிக்க வைத்தார்கள். சிறு வயதிலிருந்தே வீட்டின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டதால் எங்களுக்காக எதையும் கேட்டுப் பழகவில்லை. பெற்றோரின் சுமையை அதிகப்படுத்தக் கூடாது என்பதே எங்கள் எண்ணமாக இருந்தது.
இன்று நான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறேன். பொருளாதாரரீதியாக எந்தக் குறையும் இல்லை. ஆனாலும், எனக்காக ஏதாவது வாங்க வேண்டும் என்று நினைத்தாலே மனதில் ஒரு குற்றவுணர்வு தோன்றுகிறது. புதிய ஆடை வாங்குவது, வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உணவைக் கடையில் வாங்குவது, அழகு நிலையத்துக்குச் செல்வது போன்ற சிறிய செலவுகளுக்குக்கூட, ‘இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமா?’ என்கிற எண்ணம் மனதை விட்டு நீங்குவதில்லை.