

‘எங்கும் டயட் எதிலும் டயட்’ என்றாகிவிட்ட உலகில், ‘டயட்டைப் பற்றிக் கவலைப்படாமல் மனதுக்குப் பிடித்ததைச் சாப்பிட்டு எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்’ எனும் வார்த்தைகள் நிச்சயம் பலருக்கு ஆசுவாசம் தரும். சுமார் 25 ஆண்டுகளாக அப்படிப்பட்ட கருத்துகளைத் தனது நூல்கள், யூடியூப் காணொளிகள் வழியே வழங்கிவரும் ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகருக்கு லட்சங்களில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
அவர்களில் பெண்களின் எண்ணிக்கை கணிசம். எந்தத் தயாரிப்பையும் விளம்பரத்தையும் பரிந்துரைப்பதில்லை என்பதுதான் இத்தனை ‘ஃபாலோயர்’களைப் பெற்றுத் தந்திருக்கிறது. இவரது பத்தாவது நூலான ‘தி காமன்சென்ஸ் டயட்’ நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
சமீபத்தில் சென்னையில் நடந்த ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ நிகழ்வில் பங்கேற்ற ருஜுதா, ‘உணவு நமது எதிரியல்ல’ என்பதில் தொடங்கிச் சுயாதீன ஆளுமை நோக்கிய பெண்களின் நகர்வுவரை பலவற்றைப் பற்றி உரையாற்றினார்.
‘வெவ்வேறு பொருள்கள் ஒன்றிணைந்த உணவை, இந்தப் பருவத்தில் இந்த அளவில் சாப்பிட வேண்டுமென்ற பொது அறிவை, குறிப்பிட்ட கால இடைவெளியில் உண்ணுகிற வழக்கத்தைக் கைவிட்டு அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுகிற பழக்கம் நம்மைத் தொற்றியிருக்கிறது’ என்கிற வருத்தம் அவரது பேச்சில் தொனித்தது.