

கணத்துக்குக் கணம் தன்னைப் புதுப்பித்துக் கொள்வது அழகின் ஓர் அடையாளம் என்பது போல் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி கோவையில் நடைபெற்ற மகளிர் திருவிழாவும் மிகுந்த உற்சாகத்துடன் நாள் முழுவதும் களைகட்டியது.
கோவை அவிநாசி சாலை, நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் வாசகியர் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். கடலூர் செம்மண்டலம் ச.பா.மோகனசங்கரியின் பரதநாட்டியக் கலை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
விழாவில் கோவை மாநகர கிழக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் வ.நிர்மலா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசும்போது, “ஒரு நல்ல சமுதாயம் உருவாக, பெண்களின் பாதுகாப்பு மிக மிக அத்தியாவசியம். ஏனென்றால், மானுடச் சமூகத்தை எப்போதும் இயக்குபவர்கள் பெண்கள்தான். சைபர் கிரைம் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றியிருப்பதால் ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்கிறேன். ஃபேஸ்புக்கில் ஓர் இளம்பெண்ணை ஒருவர் தொடர்புகொள்கிறார்.
அந்தப் பெண்ணும் பழகத் தொடங்க, இருவரும் ஒளிப்படங்களைப் பகிர்கின்றனர். அப்போது அந்தப் பெண்ணின் படத்தைத் தவறான கண்ணோட்டத்துடன் சித்தரித்து, ஊரில் உள்ள வாட்ஸ்அப் குழுவில் அந்த ஆண் பகிர்கிறார். இதைப் பார்த்த பெண்ணின் தந்தைக்குப் பேரதிர்ச்சி. என்ன செய்வதென்று தெரியாமல் புகார் அளிக்க வருகிறார். விசாரித்து அந்த நபரைக் கைது செய்தோம். அவருக்கு வயது 52. ஃபேஸ்புக்கில் போலியான படங்களைப் போட்டு நட்பை வளர்த்துள்ளார். அதனால், அந்தப் பெண்ணை மனதளவில் மீட்கப் பெரும் அவகாசம் தேவைப்பட்டது.
வ.நிர்மலா, அனிதா, தேவிகிருபா