

வெளியுலகம் அறியாமல் வீட்டிலே அடைபட்டிருந்த கிராமத்துப் பெண்களை, மகளிர் சுயஉதவிக் குழுவின் மூலம் இந்த உலகின் நீளத்தைக் காணும்படி மாற்றியிருக்கிறார் வெண்ணிலா. தமிழ்நாடு அரசின் சிறந்த தொழில்முனைவோருக்கான விருதைப் பெற்ற வெண்ணிலா, கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தின் அருகிலுள்ள ஊ.ஆதனூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். திருமணத்துக்குப் பின் பெரும்பாலான பெண்கள் வீட்டிலே முடங்க வேண்டிய நிலை இன்றளவும் தொடர்வதை மாற்றி, வீட்டில் இருந்தாலும்கூடப் பெண்கள் சாதிக்க இயலும் என நிரூபித்துள்ளார் வெண்ணிலா.
தூத்துக்குடி மாவட்டதில் பிறந்து சென்னையில் முதுகலை பயின்ற வெண்ணிலா, திருமணத்துக்குப் பிறகு கடலூரில் குடியேறினார். திருமணமான புதிதில் அந்த ஊரின் பண்பாடும் அந்த ஊர்ப் பெண்கள் பின்பற்றிய பழக்க வழக்கங்களும் வெண்ணிலாவை வியப்பில் ஆழ்த்தின. “ஆண்களின் முன்னால் பெண்கள் நாற்காலியில் அமரக் கூடாது, பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கக் கூடாது என்பது போன்ற ‘சட்ட திட்டங்கள்’ எனக்குப் புதிதாக இருந்தன. பெண்கள் எப்போதும் ஆண்களைச் சார்ந்தே இருக்கவேண்டிய நிலை இருந்தது. நான் எம்.சி.ஏ., முடிக்கும் முன்பே எனக்குத் திருமணம் முடிந்துவிட்டது. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு நானும் வீட்டிலேயே முடங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை எப்படி மாற்றுவது என யோசித்தபோது உதித்த யோசனைதான் மகளிர் சுயஉதவிக் குழு” என்கிறார் வெண்ணிலா.