

என் கணவரின் அத்தைதான் வாகைக்குளம் பெரியம்மா. இப்படி ஏதாவது எழுதுகிறபோதுதான் முத்தம்மாள் என்கிற அவரது பெயர் நினைவுக்கு வரும். மற்றபடி அவர் எப்போதும் எனக்கு ‘வாகைக்குளம் பெரியம்மா’தான். பிள்ளைகளுக்கு அவர் ‘கண்ணாடி பாட்டி’. அதிகாலையில் வீட்டு வாசலில் வந்துவிழும் செய்தித்தாளை நகர்த்திவிட்டு வீட்டைப் பெருக்குவோம், செய்தித்தாள் ஆண்களுக்கானது என்கிற எண்ணத்தோடு. ஆனால், பெரியம்மா அதிகாலை வேளையில் கண்ணாடி போட்டுக்கொண்டு நாளிதழ் படிக்கும் அழகே தனிதான்.
உடல் நலக்குறைவு, பிரசவம் போன்று மருத்துவமனையில் சேர்த்துப் பார்க்க வேண்டியது வந்தால் எங்கள் உறவு வட்டத்தின் முதல் தேர்வு வாகை பெரியம்மாதான். மெத்தப்படித்தவர்கள்கூட மருத்துவர்களிடம் பேசத் தயங்கும்போது தயக்கம் ஏதுமின்றித் தெளிவாகப் பேசி உண்மை நிலவரத்தை அறிந்துகொள்வார். அடுத்த முறை மருத்துவமனைக்குச் சென்றால் மருத்துவரே, “அந்தக் கண்ணாடி பெரியம்மா எங்கே?” எனத் தேடுவார்.