போகிற போக்கில்: ஒன்றுமே தெரியாதவருக்கு இங்கே வேலை!

போகிற போக்கில்: ஒன்றுமே தெரியாதவருக்கு இங்கே வேலை!
Updated on
1 min read

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் இயங்கிவருகிறது ஷபனா கைவினைப் பொருட்கள் நிறுவனம். உள்ளே நுழைந்தால் பெண்கள் பல குழுக்களாகப் பிரிந்து பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் ஆண்கள் மண்ணைத் தரம் பிரிப்பதிலும் தயாரான பொம்மைகளைப் பத்திரமாக அனுப்புவதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ரசனையான இந்தத் தொழிலுக்குச் சொந்தக்காரர் ஷகிலா ஃபாரூக்.

“பள்ளிப் படிப்பை முடித்தவுடனே திருமணம் நடந்து விட்டது. கணவர் செராமிக் தொழிற்சாலையில் வேலை செய்துவந்தார். அப்போது மண்ணாலான கைவினைப் பொருட்கள் செய்யும் யோசனை வந்தது. உடனே சாலை அகரத்தில் மண்பாண்டங்கள் செய்பவர்களை அழைத்துப் பேசினேன். கையில் பணமில்லை. காதி கிராமத் தொழில் வாரியம் மூலம் கடன் வாங்கி, விழுப்புரத்தில் தொழிலை ஆரம்பித்தேன். பிறகு முண்டியம்பாக்கத்துக்கு மாற்றிக் கொண்டேன்” என்று சொல்லும் ஷகிலாவின் யூனிட்டில் 93 பேர் வேலை செய்கிறார்கள். இவர்களில் 90 சதவீதம் பெண்கள்.

“எனக்கு எதுவும் தெரியாது என்று வருபவர்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்கிறோம். பிறகு அவர்களின் திறமையைக் கண்டறிந்து, வேலை தருகிறோம். கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், குடிகாரர்களின் மனைவிகள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இவர்களுக்குள் ஒரு குழு அமைத்து, அவர்களின் சேமிப்பில் இருந்து நிதி உருவாக்கி, தேவைப்படுகிறவர்களுக்கு கடன் கொடுத்து உதவுகிறோம். அரசின் உதவியுடன் 13 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கிறோம்” என்கிறார் ஷகிலா.

இரண்டு ரூபாய் அகல் விளக்கிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் விநாயகர் சிலை வரை தயாரிக்கும் ஷகிலாவின் நிறுவனத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி கையால் தேசிய விருது கிடைத்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in