Published : 04 Dec 2016 01:07 PM
Last Updated : 04 Dec 2016 01:07 PM

பருவத்தே பணம் செய்: லாபத்தை நாமே தீர்மானிக்கலாம்

டீமேட் கணக்கு என்றதும் கண்ணுக்குச் சிக்காமல் கடுகு டப்பாவுக்குள் கிடந்த ஆயிரம் ரூபாய் நோட்டைப் பார்த்தது போல ஏன் பதறுகிறீர்கள்? டீமேட் என்பது வேறொரு வகையான முதலீட்டின் சாவி. அது என்ன வேறொரு வகையான முதலீடு?

நாம் இதுவரை பேசிய வங்கி சேமிப்பு, சீட்டு, தங்கம், அடுத்து நாம் பேசப் போகும் டெபாசிட்டுகள் எல்லாம் குறிப்பிட்ட அளவுக்குதான் ரிட்டர்ன் தரும். அதாவது வங்கி சேமிப்பு என்றால் அவர்கள் நிர்ணயித்திருக்கும் வட்டியைத்தான் தருவார்கள். அடுத்து நாம் பேசப்போகும் டெபாசிட்களில் முதலீடு செய்தாலும் குறிப்பிட்ட ரிட்டர்ன்தான் கிடைக்கும். சீட்டு முதலீட்டைப் பொறுத்த அளவில் சின்னதாக ஒரு வாய்ப்பு இருக்கிறது. நாம் அமைதி காத்து கடைசியில் எடுத்தால் ஓரளவு லாபம். முந்திக்கொண்டு எடுத்தால் அது குறையும். ஆனால், இதிலும் அபரிமிதமான லாபம் என்பதற்கு வாய்ப்பில்லை.

ஆனால், வேறொரு வகை முதலீடு என்று சொல்லப்படும் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளில் எவ்வளவு லாபம் கிடைக்க வேண்டும் என்பதை முதலீடு செய்பவரே தீர்மானிக்க முடியும். அதனால்தான் அது முந்தைய முதலீடுகளில் இருந்து வித்தியாசப்படுகிறது.

அந்த வகை முதலீடுகளுக்குள் செல்வதற்கு முன் நாம் டெபாசிட்கள் பற்றிப் பேசிவிடலாம். டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு வங்கிப் பரிமாற்றங்களில், பணப் புழக்கத்தில் புதிய வேகம் ஏற்படும் என்ற நம்பிக்கை எழுந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது நாம் செய்யும் டெபாசிட்டுகளுக்கு இப்போது கிடைக்கும் ரிட்டர்ன் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை. அதனால், இப்போது கிடைக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதிக வட்டி தரும் முதலீடு

டெபாசிட்டில் இரண்டு வகை உண்டு. வங்கிகளில் செய்யப்படுவது முதல் வகை, தனியான நிதி நிறுவனங்களில் செய்யப்படுவது இன்னொரு வகை. தனியான என்றுதான் சொல்லியிருக்கிறேன், தனியார் என்று சொல்லவில்லை. அரசு சார்ந்த பல நிறுவனங்கள் டெபாசிட்களைத் திரட்டுகின்றன. தனியார் நிறுவனங்களும் டெபாசிட் மூலம் நிதி திரட்டுதலில் ஈடுபடுகின்றன. குறிப்பட்ட கால அளவுக்கு வெளியில் எடுக்க முடியாத வகையில் வைப்புநிதியாக வாங்கப்படும் தொகைக்கு, வங்கியில் கிடைக்கும் வட்டி விகிதத்தைவிடக் கொஞ்சம் அதிகமாக வட்டி கொடுக்கும் இந்த நிதி நிறுவனங்கள், நல்ல முதலீட்டு வாய்ப்புதான்.

நாம் பல்வேறு வகைகளில் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை இதுபோன்ற டெபாசிட்களில் முதலீடு செய்யலாம். சீட்டு மூலமாகவோ ரெகரிங் டெபாசிட் மூலமாகவோ சேமித்த தொகையை இந்த வழியில் முதலீடு செய்யலாம். அரியர் பணமாகவோ போனஸ் பணமாகவோ கிடைக்கும் மொத்தப் பணம்கூட இந்த வழியில் முதலீடு செய்ய ஏற்றதுதான்.

இந்த முதலீட்டில் என்ன லாபம்?

1. நாம் சாதாரண சேமிப்பு கணக்கிலோ ரெகரிங் டெபாசிட்டிலோ போட்டு வைக்கும் பணத்தைவிட நிச்சயமாகக் கூடுதலான வட்டி கிடைக்கும் வாய்ப்பு இதில் இருக்கிறது.

2. இதில் நம் பணம் கிடைக்காமல் போய்விடும் என்ற ஆபத்து ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். மிக மிக சொற்பமான ஆபத்துதான் இதில் இருக்கிறது. அதனால் நம் முதலீடு பற்றிய பயமில்லாமல் இருக்கலாம்.

3. முதலீடு செய்யும்போதே கால அளவு கொடுக்கப்பட்டு விடும் என்பதால், இந்த முதலீட்டின் முடிவில் என்ன ரிட்டர்ன் கிடைக்கும் என்பதை நாம் எளிதாகக் கணித்துவிட முடியும்.

எந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்வதாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் பின்னணியைப் பற்றி தெரிந்துகொண்டு முதலீடு செய்யவேண்டும். ஆரம்பகட்ட அறிவிப்பைப் பார்த்துவிட்டு, பணத்தைப் போட்டால் அந்த நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லாமல் போகும்போது நமக்குதான் பாதிப்பு. அதனால் தெளிவாக, நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை அவசியம்

இந்த வகை முதலீட்டில் லாபம் எவ்வளவு கிடைக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியும். அதாவது கொஞ்சம் காத்திருந்தால் நூறு சதவிகித லாபத்தைக்கூட நாம் ஈட்ட முடியும். அதே சமயம் லாபத்தைப் போலவே நஷ்டமும் ஏற்படலாம். அதனால்தான் இந்த வகை முதலீடு மிக மிகக் கவனமாகக் கையாள வேண்டியதாகிறது.

அதிக நஷ்டம் ஏற்பட சாத்தியமுள்ள முதலீட்டைத் தேர்வு செய்யும்போது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ஒருவேளை இந்த முதலீடு நம்மைக் கைவிட்டுவிட்டால் அதாவது மொத்தமாகப் போட்ட பணம் போய்விட்டால், நம் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்குமா என்பதுதான். அதுதான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய விஷயம். அதற்கான மன ரீதியான தயாரிப்புதான் இது. இன்னும் கொஞ்சம் தயாராக வேண்டியிருக்கிறது. அதையும் பார்த்துவிடுவோம்!

(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x