Last Updated : 20 Nov, 2016 12:46 PM

 

Published : 20 Nov 2016 12:46 PM
Last Updated : 20 Nov 2016 12:46 PM

வானவில் பெண்கள்: குஜராத்தியில் திருக்குறள்

உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள், தற்போது குஜராத்தியிலும் வெளிவந்திருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா, சென்னை மாநிலக் கல்லூரியில் இந்தித் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.

குஜாராத்திலுள்ள பாவ் நகரில் பெண்கள் அதிகம் படிக்க அனுமதிக்காத ஒரு குடும்பத்தில் பிறந்தவர் கோகிலா. தனது விடாமுயற்சியால் இந்தியில் முனைவர் பட்டம் பெற்றார். தந்தையின் தொழில் நிமித்தமாக 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்தார்.

“குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதவும் படிக்கவும் தெரியும். மாநிலக் கல்லூரியில் இந்தி உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தேன். தமிழ் தெரியாததால், மாணவர்களோடு நெருக்கமாக உரையாட முடியவில்லை. தமிழில் எழுதப்பட்ட பலகைகள், சுவரொட்டிகளைப் பார்த்தபடியே வருவேன். தமிழில் கையொப்பமிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தபோது, தமிழில் கையெழுத்து போடக் கற்றுக்கொண்டேன். பிறகு ஆர்வம் தூண்ட, தமிழும் கற்றேன்” என்ற கோகிலா, ஜெயகாந்தனின் சிறுகதைகளை விரும்பிப் படித்திருக்கிறார்.

குறள் பீடத்துக்காகத் தமிழின் சிறந்த சிறுகதைகள் சிலவற்றை இந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார்.

“பேருந்துகளில் எழுதப் பட்டிருக்கும் திருக்குறள்களைப் படித்து, நானே பொருளுணர்ந்து கொண்டேன். பேச்சாளர்கள் பலரும் திருக்குறளின் அருமையை எடுத்துச் சொன்ன போது, அவற்றின் ஆழ்ந்த பொருளும் செறிவான மொழி நடையும் கண்டு வியந்தேன். ஒரு சமுதாயம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு நுட்பமாக வேறெந்த நூலும் பதிவு செய்ததில்லை. தேசம், காலம் போன்ற எல்லைகளைக் கடந்து நிற்கும் சிறப்புக்குரியது திருக்குறள். இதை என் தாய்மொழியில் மொழிபெயர்க்க ஆவல் கொண்டேன். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அனுமதியளித்தது. மூன்றாண்டு கால முயற்சியில் இது சாத்தியமானது” என்றவர், கருத்து புரியாமல் மொழிபெயர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார். மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது என்ற பிரதமரின் பாராட்டும், சமீபத்தில் மொழிபெயர்ப்பு நூலுக்கான நல்லி ‘திசை எட்டும்’ விருதும் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறார் கோகிலா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x