

கொளுத்தும் கோடைக்கு நடுவில் நாம் இளைப்பாறக் கிடைத்த நாளாக இருக்கிறது சித்திரை மாதப் பிறப்பு. தமிழர்கள் பலரும் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். அன்று பெரும்பாலானோர் வீடுகளில் அசைவ விருந்து கமகமக்கும். சித்திரையில் திரும்பும் திசையெங்கும் மலர்கள் பூத்துக் குலங்க, அவற்றுள் ஒன்றான வேப்பம்பூவில் பச்சடி செய்வோரும் உண்டு. சித்திரை முதல் நாளைச் சிறப்பிக்கும் வகையில் மட்டன் கோலா உருண்டை சமைக்கக் கற்றுத்தருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. பாரம்பரிய உணவைக் காலத்துக்கு ஏற்ப புதிய முறையில் சமைப்பதில் வல்லவர் இவர்.
என்னென்ன தேவை?
கொத்துக் கறி – கால் கிலோ
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பொட்டுக்கடலை – 2 கைப்பிடி (பொடித்தது)
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, எண்ணெய், இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு
உருண்டைக்குத் தேவையான மசாலா:
காய்ந்த மிளகாய் - 3
பட்டை – 2 துண்டு
ஸ்டார் பூ - 1
கிராம்பு – 2
ஏலக்காய் - 1
சோம்பு, சீரகம் - அரை டீஸ்பூன் (இவற்றைத் தண்ணீர் விடாமல் பொடித்துக்கொள்ளுங்கள்)
எப்படிச் செய்வது?
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு, அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து வதக்குங்கள். அதில் கொத்துக்கறியைச் சேர்த்து நன்றாக வதக்குங்கள். கறியில் இருந்து தண்ணீர் வெளியே வரும்போது மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். தண்ணீர் வற்றியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கெட்டியானதும் இறக்கி ஆறவையுங்கள். ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். பின் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டை பிடிக்கும் பக்குவம் வரும் வரை சேர்த்துப் பின் சிறு சிறு உருண்டையாகப் பிடித்து எண்ணெய்யில் பொரித்தெடுங்கள்.