போர் விமானங்களை இயக்கும் பெண்கள்

போர் விமானங்களை இயக்கும் பெண்கள்

Published on

இந்திய விமானப் படையில் போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண்கள் இனி நிரந்தரமாகப் பணியமர்த்தப்படுவார்கள் என்று மத்தியப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகே தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண்களின் நுழைவு சாத்தியமானது. போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண்கள் சோதனை முயற்சியாக ஈடுபடுத்தப்பட்டனர். போர் விமானிகள் அடங்கிய மூவர் குழு உருவாக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தக் குழுவைச் சேர்ந்த அவனி சதுர்வேதி, மிக் 21 ரக போர் விமானத்தை 2018இல் இயக்கி, போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி என்கிற வரலாற்றைப் படைத்தார். தற்போது போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண் விமானிகள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கும் மத்திய அரசு, பெண்களின் சக்திக்கு இது சான்று எனவும் குறிப்பிட்டுள்ளது.

பாலினச் சமத்துவத்தை முன்னெடுத்த விமானப் படையின் செயலைத் தொடந்து கடற்படையும் போர்க்கப்பல்களில் பெண் கப்பலோட்டிகளை 2020இல் பணியில் அமர்த்தியது. தேர்ந்தெடுக்கப்பட்ட 28 பெண் அதிகாரிகளில் 15 பேர் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா உள்ளிட்ட விமானம் தாங்கிப் போர்க் கப்பல்களை இயக்கும் பணியில் அமர்த்தப்பட்டனர். பெண் கப்பலோட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் இருப்பதாக கடற்படை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in