Published : 20 Oct 2019 11:12 AM
Last Updated : 20 Oct 2019 11:12 AM

இனி எல்லாம் நலமே 28: தாய்ப்பால் தருவதால் ‘அழகு’ கெடுமா?

அமுதா ஹரி

பச்சிளங்குழந்தைக்குத் தொப்புள்கொடி உதிரும்வரை சீழ் பிடிக்காமல் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். கிராமங்களில் சிலர் அந்த இடத்தில் உலர்ந்த ஆட்டுப்புழுக்கையை வைப்பார்கள். தொப்புள்கொடி விழுந்த பிறகு தொப்புள் வீங்கி இருந்தால் அந்த இடத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக் கட்டுவார்கள். இப்படிச் செய்வது தவறு. மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, அதன்படி நடக்க வேண்டும்.

பிறந்த குழந்தைகளுக்கு இயற்கை அளித் துள்ள வரப்பிரசாதம் தாய்ப்பால். சாதாரணப் பிரசவமாக இருந்தாலும் அறுவை சிகிச்சை மூலம் நிகழ்ந்த பிரசவமாக இருந்தாலும் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் தர வேண்டும். குழந்தை பிறந்ததும் தாய்க்கு முதலில் சுரக்கும் கொலஸ்ட்ராம் என்கிற சீம்பாலைக் கண்டிப்பாகக் குழந்தைக்குப் புகட்ட வேண்டும்.

தாய்ப்பால் என்னும் வரம்

தாய்ப்பால் தரும்போது குழந்தையை எப்படிப் பிடிப்பது, எப்படிக் குழந்தையை அருந்தவைப்பது என்பது முக்கியம். குழந்தையைக் கழுத்தின் அடியில் பிடித்து, மார்புக் காம்பு அதன் வாய்க்குள் போகும்படி வைத்துக்கொள்ள வேண்டும். சிலர் மார்பைக் குழந்தையின் வாய்க்குள் திணித்து, பால் கொடுப்பார்கள். இப்படிச் செய்வதால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படக்கூடும். அதேபோல் குழந்தையைத் தவறான நிலையில் வைத்துப் பால் கொடுத்தால் புரையேறிவிடும்.

அம்மா குனிந்து குழந்தைக்கு வாகாகத் தன்னை வைத்துக்கொள்வதைவிட, தான் சௌகரியமாக உட்கார்ந்துகொண்டு, குழந்தையை அதற்கேற்றாற்போல் வைத்துக் கொள்ள வேண்டும். குனிந்தபடியே பால் கொடுப்பதால் தாய்க்கு முதுகு வலி ஏற்படும். படுத்துக்கொண்டு பால் கொடுப்பதும் தவறு. சிலருக்கு மார்புக் காம்புகள் உள்நோக்கி இருக்கலாம். சிலருக்குத் தட்டையாக இருக்கும். இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தாலும் குழந்தை யைச் சரியான நிலையில் வைக்க முடியாது. ஆகவே, இதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசித்து அதன்படி நடக்க வேண்டும்.

அன்பால் வலுப்பெறும் வளர்ச்சி

பிரசவத்துக்குப் பிறகு மற்ற ஹார்மோன்கள் குறைந்து புரோலாக்டின் (Prolactin) என்ற ஹார்மோன் அதிகமாகும். இதன் சுரப்பால்தான் தாய்ப்பால் சுரக்கிறது. தாய்ப்பால் சுரப்பதற்கும் மூளைக்கும் தொடர்பு இருக்கிறது. குழந்தை மார்பில் வாயை வைத்து உறிஞ்சும்போது தாயின் பிட்யூட்டரி சுரப்பில் இருந்து ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது.

சிலர் தாய்ப்பால் வரவில்லை என்று குழந்தையைப் பால் குடிக்க விட மாட்டார்கள். குழந்தை வாய்வைத்து உறிஞ்சினால்தான் தாய்ப்பால் வரும். ஆரம்பத்தில் பால் கொஞ்சமாக வந்தால்கூடக் குழந்தை குடிக்கக் குடிக்க ஓரிரண்டு நாட்களில் நன்கு சுரக்கத் தொடங்கிவிடும். முதல் ஆறு மாதங்களுக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே போதும். தண்ணீர்கூடத் தேவையில்லை. தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் கூறுகள் உண்டு.

குழந்தைக்குத் தேவைப்படும் அனைத்து சத்துகளும் தாய்ப்பாலிலேயே இருப்பதால் வேறு இணைச் சத்து ஏதும் தனியாகத் தர வேண்டிய அவசியமில்லை. தாய்ப்பால் தரும்போது குழந்தையை உடலோடு நெருக்கமாக அணைப்பதால் தாய்க்கும் சேய்க்குமான பிணைப்பு/பந்தம் வலுப்படும். குழந்தை பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணரும்போது, அதன் அனைத்து விதமான வளர்ச்சிகளும் சரிவர அமைகிறது. உணர்வுரீதியான, உடல்ரீதியான, மனோரீதியான வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிக மிக அவசியம்.

அழுத பிள்ளைக்குத்தான் பால்

குழந்தைக்கு வேண்டியபோது பால் தருவது தான் சிறப்பானது. அழும்போது, நன்றாகப் பால் கொடுத்துத் தூங்க வைக்கலாம். சிலர் குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தால்கூட இரண்டு மணி நேரமாயிற்று என்று எழுப்பிப் பால் தருவார்கள். இது தவறில்லை, என்றாலும் அவசியமில்லை. பசித்தால் குழந்தை விழித்துக்கொண்டு அழும். மார்பின் முன்பகுதியில் சுரக்கும் பாலை மட்டும் குழந்தைகள் குடித்துவிட்டுத் தூங்கி விடும். ஆனால், மார்பின் பின்பகுதியில் சுரக்கும் பாலில்தான் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கிறது. அதனால் இந்தப் பாலையும் குழந்தை குடிக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தை பிறந்த புதிதில் பால் குடிக்க 20 நிமிடங்கள்கூட எடுத்துக்கொள்ளும். பால் குடிப்பதில் தேர்ச்சிபெற்ற பிறகு, ஐந்து நிமிடங்களிலேயே குடித்து முடித்துவிடும். குழந்தை பால் குடித்து முடித்ததும் தோள் மேல் போட்டுத் தட்டிக்கொடுத்து, ஏப்பம் விடவைக்க வேண்டும். நன்றாகப் பால் குடித்துவிட்டால் சில குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்குக்கூடத் தூங்கும்.

குழந்தைக்குப் பால் போதவில்லை என்றால் தானாக எழுந்துவிடும். தலையைத் தலையை ஆட்டும். மார்பகத்தைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தேடும். வாய்க்கு மார்பு தட்டுப்படவில்லை யென்றால் அழும்; தூங்காது. இப்படியெல்லாம் இருந்தால் தாய்ப்பால் சரிவரத் தரப்படவில்லை என்று அர்த்தம்.

தாய்ப்பால்: சில மாயைகள்

தாய்ப்பால் தரும்போது ஆசுவாசமாக உணர வேண்டும். சிலருக்கு வேலைக்குப் போக வேண்டிய அவசியம் இருக்கலாம். தாய்ப்பால் சரிவர சுரக்காத பிரச்சினையும் சிலருக்கு இருக்கலாம். இவற்றைத் தாண்டி ‘அழகு’ பற்றிய தவறான கண்ணோட்டத்தில் இருக்கும் சிலர், தாய்ப்பால் கொடுத்தால் மார்பு தொய்ந்துவிடும் என்று நினைக்கலாம்.
சிலருக்குத் தாய்ப்பால் கொடுக்கப் பிடிக்காமல் இருக்கலாம். தூக்கம் கெட்டுப்போகிறது; வேறு பால் என்றால் அம்மாவோ வேறு யாரோ தந்துவிட முடியும் என்று யோசிப்பவர்களும் இருக்கலாம். இவர்கள் குழந்தைப்பேறு, தாய்ப்பால், குழந்தை வளர்ப்பு பற்றி மனத்தளவில் தயாராகாதவர்களாகக்கூட இருக்கலாம்.

தாய்ப்பால் தருவதால் மார்புகள் தொய்வ தில்லை. தாய்ப்பால் தரும் நிலை, உடற்பயிற்சிகள் செய்யாதது போன்றவற்றாலும் தொய்வு ஏற்படலாம். எனவே, பெண்கள் அழகு கெட்டுவிடும் என்று தாய்ப்பால் தராமல் இருக்கக் கூடாது. மார்புக் காம்பு உள்நோக்கி போயிருந்தால் ‘nipple shield’ பயன்படுத்திச் சரி செய்யலாம். இதைப் பொருத்திக்கொள்வதால் குழந்தை பால் குடிக்க ஏதுவாக இருக்கும். மார்புக் காம்பு சிறிதாக இருந்தால் பயிற்சி செய்து சரிசெய்யலாம்.

சிலநேரம் குழந்தைக்குப் பல் முளைத்த பிறகு பால் குடிப்பதால் மார்பில் காயம் வரலாம். அதற்கு முன்னதாக ஈறுகள் கூராக இருந்தாலும் காயம் வரலாம். இப்படி ஏற்படும் காயம் புண்ணாகாமலோ சீழ் கட்டாமலோ பார்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரை ஆலோசித்து, மருந்து தடவலாம். ஆனால், பால் கொடுப்பதற்கு முன் இரண்டு, மூன்று முறை வெந்நீரால் நன்கு கழுவித் துடைத்துவிட வேண்டும்.

இரண்டு மார்புகளிலும் மாற்றி மாற்றிப் பால் கொடுக்க வேண்டும். சௌகர்யமாக இருக்கிறது என்று ஒரே பக்கம் மட்டும் கொடுத்தால் இன்னொரு மார்பில் பால் கட்டிக்கொள்ளும். இதனால் காய்ச்சல்கூட வரலாம். அந்த மாதிரி நேரத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, கட்டியைக் கரைத்துவிடலாம். பிரச்சினை தொடர்ந்து இருந்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டும். கவனிக்காமல் விட்டால் மார்பகச் சீழ்க்கட்டியாகிவிடும்.

(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x