Published : 01 Feb 2015 02:40 PM
Last Updated : 01 Feb 2015 02:40 PM

என் பாதையில்: அங்கிள்க்கு அந்த ரைம்ஸ் சொல்லு!

தர்ம சங்கடம் என்ற ஒரு வார்த்தைக்கு மிகச் சரியான அர்த்தத்தைப் பலர் உணர்ந்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆனால் நான் அதைப் பல முறை உணர்ந்து அனுபவித்துள்ளேன். நம் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. யாராவது ஒரு நபரைச் சந்தித்தால், உடனே வீட்டுக்கு வாங்க என்று அழைப்பார்கள். இது எல்லோரும் செய்வதுதானே என்று நினைக்கலாம். ஆனால் மேலை நாடுகளில் இந்தப் பழக்கம் இல்லை என்று கேள்விப்பட்டுள்ளேன். சரி அதை விட்டுவிடுவோம். நாம் அதே நபரை மீண்டும் ஒரு முறை சந்திக்கும்போது, ‘என்னங்க வீட்டுக்கு வரவேயில்லை’ என்ற குறையோடுதான் அவர் நம்மிடம் பேச ஆரம்பிப்பார். உடனே நாம் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்து குற்றவுணர்வுடன் அடுத்த முறை வருகிறேன் என்போம். அவரும் அத்துடன் விடமாட்டார். கட்டாயமாக வாங்க என்று அன்புக்கட்டளை இடுவார்.

சரி, நம்மைப் பார்க்கும் இடத்தில் எல்லாம் கூப்பிடுகிறாரே என்று நாம் போய்விட்டால் அங்கு நமக்கு ஒரு விநோதமான அனுபவம் காத்திருக்கும். கதவைத் திறந்தவுடன், ஒரு திகைத்த பார்வையுடன் சிரிப்பார். ‘என்னடா இது, சும்மாதானே கூப்பிட்டோம், நிஜமாகவே வந்துவிட்டார்’ என்று அந்தப் பார்வை அர்த்தம் சொல்லும். சமாளித்துக்கொண்டு வாங்க வாங்க என்று உள்ளே அழைத்துச் செல்வார். அடுத்து அவரது மனைவியோ/ கணவரோ வந்து ஒரு அசட்டுச் சிரிப்புடன் வாங்க என்பார். நம்மை உட்கார வைத்துவிட்டு அரக்கப் பரக்க வீட்டை ஒதுக்குவார்கள். என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்பார்கள். ஒன்றும் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் காபியோ, குளிர்பானமோ ஏதாவது ஒன்று எடுத்து வருவார்கள். மிக மிக சூடாக ஸ்ட்ராங்காக காபி குடிக்கும் பழக்கம் உள்ள எனக்கு அவர்கள் தரும் மிதமான சூட்டில் உள்ள காபியைக் குடிக்கவே முடியாது. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் நாகரிகம் கருதி வைத்துக்கொண்டே இருப்பேன். பின் விழுங்கித் தொலைப்பேன்.

அடுத்து அவர், ‘என்ன இந்தப் பக்கம்?’ என்று கேட்பார். அச்சச்சோ, இவருக்கு அதற்குள் மறந்து விட்டதா? இவர்தானே என்னைக் கட்டாயம் வீட்டுக்கு வர வேண்டும் என விரும்பி அழைத்தார் என்ற எண்ண ஓட்டத்துடன் நான் சிரித்துக்கொண்டே சமாளிப்பேன். ‘இந்தப் பக்கமாய் வந்தேன், அதான் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று’ என்பேன். அவரும் சரி, என் பிள்ளைகளைக் காட்டுகிறேன் என்று அவர்களை அழைப்பார். பதிலே வராது. மீண்டுமொரு முறை அழைப்பார். மற்றொரு முறை அழைப்பார். இம்முறையும் பதில் வராது. சரி விடுங்க சார் என்று நான் கூறினாலும் விடாது போய் அழைத்து வருவார்.

நாம் சிரித்துக்கொண்டே உன் பேர் என்ன என்று கேட்டால் அந்த வாண்டுகள் நம்மை முறைக்கும். இவர் எதற்காக வந்து இப்படி நம் உயிரை எடுக்கிறார் என்பது போல் இருக்கும் அந்த முறைப்பு. வேண்டா வெறுப்பாக பதில் வரும். இது தெரிந்து உனக்கு என்னடா ஆகப்போகிறது என்று கேட்பது போலவே அந்த பதில் இருக்கும். சரி இதோடு போகட்டும் என்று விடமாட்டார் அவர். அவரது குழந்தைகளின் பெருமையைப் பற்றி பேசி மார்க் ஷீட் எடுத்துட்டு வா என்றோ, ஏதாவது ரைம்ஸ் சொல்லு என்றோ சொல்வார். அந்தக் குழந்தை அப்பா சொல்வதையும் தட்ட முடியாமல் நம்மிடமும் சொல்ல விருப்பம் இல்லாமல் விழிக்கும். அப்போது ஒரு உணர்வு தோன்றுமே அதுதான் தர்ம சங்கடம்.

சரி, இவ்வளவு பேசுகிறாயே நீ எப்படி என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அடியேனும் அப்படித்தான். நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் என் குழந்தைகள் பற்றிய கதைகளிலிருந்து நீங்கள் தப்ப முடியாது!

- முருகேஸ்வரி ரவி, சென்னை - 13.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x