Last Updated : 29 Jan, 2017 12:57 PM

 

Published : 29 Jan 2017 12:57 PM
Last Updated : 29 Jan 2017 12:57 PM

சேனல் சிப்ஸ்: அன்பான அம்மா

பொம்மலாட்டம், அழகி தொடர்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவந்த மகிமா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

“சிவகாமி சித்தி கதாபாத்திரத்தில் நடித்த பொம்மலாட்டம் தொடர் என்னோட சின்னத்திரை பயணத்தில் புதிய பாதையை அமைத்துக் கொடுத் தது. பதினைந்து, இருபது ஆண்டுகளாகச் சின்னத்திரை தொடர்களில் பயணித்துவந்தாலும் அம்மா, அண்ணி, அக்கா, அத்தை மாதிரியான குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் அனுபவமே தனிதான். தொடர், சினிமா போன்றவற்றில் மட்டும் நல்ல அம்மாவாக நடித்தால் போதுமா? நிஜத்திலும் அதைச் சாத்தியப்படுத்த வேண்டுமே! மகனின் வளர்ப்பு, படிப்பு என்று தொடர்ந்து குடும்பத்தலைவியாகப் பல வேலைகள் சூழ்ந்ததால் வெளியூர் படப்பிடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்துவந்தேன். இப்போது மகன் கல்லூரிக்குப் போகும் அளவுக்கு வளர்ந்துவிட்டதால் அவனே, ‘சினிமாவில் நடிம்மா’ன்னு சொல்றான். சீக்கிரமே என்னை அன்பான அம்மாவாக வெள்ளித் திரையில் பார்க்கலாம்’’ என்கிறார் மகிமா.

பிரியங்காவின் பூரிப்பு

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் வம்சம் தொடரில் இரட்டை வேடத்தில் நடித்துப் பாராட்டை அள்ளிய பிரியங்கா, கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் தொகுப்பாளினியாக மைக்கைப் பிடித்துவிடுகிறார்.

“கேப்டன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி யாகத்தான் என்னோட சின்னத்திரை பயணத்தைத் தொடங்கினேன். இப்போதும் தொகுப்பாளினி வாய்ப்பு வந்தால், அதைத் தவிர்க்க மனசே வராது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது நம்மை அறியாமலேயே ஒரு தன்னம்பிக்கை கிடைக்குது. அதே மாதிரி நடிப்பில் நம்பிக்கையை உருவாக்கி, அடையாளத்தைக் கொடுத்த தொடர்தான் வம்சம். ரம்யா கிருஷ்ணனின் சீரியல்ல நடிப்பதே சந்தோஷம். அதிலும் இந்தத் தொடரில் ஜோதிகா, வேதிகா என்று இரட்டை வேடங்களில் நடித்ததில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்பவும் தினமும் யாராவது ஒருத்தர்கிட்டயிருந்து பாராட்டு கிடைக்குது. இப்போதைக்கு இதைவிடப் பெரிய சந்தோஷம் எதுவுமே இல்லை!’’ என்கிறார் பிரியங்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x