Last Updated : 06 Nov, 2013 04:02 PM

 

Published : 06 Nov 2013 04:02 PM
Last Updated : 06 Nov 2013 04:02 PM

கார் ஓட்ட உரிமை கேட்கும் சவுதி பெண்கள்

உலகிலேயே பெண்கள் வாகனங்களை ஓட்டுவதற்குத் தடை நிலவும் ஒரே நாடு சவுதி அரேபியா. இந்தத் தடையை எதிர்த்து 60 க்கும் மேற்பட்ட பெண் வாகன ஓட்டிகள் சமீபத்தில் தொடர்ந்த போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் எதிர்ப்பை சாலைகளில் வண்டிகளை ஓட்டிச் செல்வதன் மூலம் வெளிப்படுத்தினார்கள். காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தி கேள்விகளை எழுப்பினாலும், பிற வாகன ஓட்டிகள் பெண் வாகன ஓட்டுனர்களை உற்சாகப்படுத்தியதாகவே அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“ எங்களைக் கடந்து சென்ற பல கார்களின் ஓட்டுனர்கள் எங்களைக் கண்டுகொள்ளவேயில்லை. ஒரே ஒரு ஆண் ஓட்டுனர் மட்டும் எங்கள் காரை நிறுத்தச் சொல்லி ஹார்ன் எழுப்பினார். நான் பயந்தேன். ஆனால் அவர் எனக்கு கைகாட்டி எங்கள் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார். சவுதி அரேபியர்கள் எங்களை அங்கீகரிக்கத் தயாராகவே உள்ளனர். அச்சம் ஒன்றுதான் இங்குள்ள பெண்களைத் தடுக்கிறது” என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி ராணா.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் பேராசிரியையும், இப்போராட்டத்தில் கலந்துகொண்டவருமான அஷிசா யூசுப், சவுதி அரேபிய அரசு அதிகாரிகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் தொலைபேசி மூலம் வந்ததாக கூறினார். அவர் கார் ஓட்டிச் செல்லும்போது, இரண்டு கார்கள் பின்தொடர்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1990, 2011 ஆம் ஆண்டுகளிலும் இதேபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டவர் அஜ்ரோஷ். அவர் தனது காரை ஓட்டிக்கொண்டு சாலையில் சென்றபோது, இரண்டு காவல்துறை அதிகாரிகள் பின்தொடர்ந்தனர். இதைப் பார்த்த அஜ்ரோஷ் நடுவில் காரை நிறுத்தி ஒரு பொம்மைக் கடைக்குள் நுழைந்து அந்த அதிகாரிகளுக்கு இரு பொம்மைக் கார்களை பரிசளித்துள்ளார்.

பெண்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் இப்போராட்ட தினத்தை அக்டோபர் 26 ஆக நிர்ணயித்துள்ளனர். அதன் நினைவாக பொம்மைக் கார்களை காவல்துறையினருக்குப் பரிசளித்ததாக அஜ்ரோஷ் குறிப்பிடுகிறார்.

யூ டியூபில் வெளியான காரோட்டும் சவுதி அரேபிய பெண்ணின் படத்துக்கு உலகம் முழுவதும் இருந்தும் பாராட்டும் ஆதரவும் குவிந்தவண்ணம் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x