Last Updated : 14 Oct, 2013 02:34 PM

 

Published : 14 Oct 2013 02:34 PM
Last Updated : 14 Oct 2013 02:34 PM

காய்கறி வாங்க தெரியுமா?

எத்தனை பெரிய சமையல் கில்லாடியாக இருந்தாலும் காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவதில் கோட்டைவிட்டு விடலாம். ஆனால் தேர்ந்தெடுப்பதிலும் நிபுணராக இதோ சில குறிப்புகள்.

தக்காளி

சிலர் செக்கச் செவேலென சிவந்து, கனிந்திருக்கிற தக்காளிப் பழங்களைத்தான் தேடுவார்கள். முழுவதுமாக சிவந்திருக்கும் தக்காளிச் சாறில் அமிலம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதனால் பச்சையும் மஞ்சளும் கலந்து செங்காயாக இருக்கும் காய்களுக்கு முதலிடம் கொடுங்கள். உருண்டையாக கெட்டியாக இருக்கும் காய்களாகப் பார்த்து வாங்குங்கள். முண்டும் முடிச்சுமாக இருந்தால் அதில் சாறு அதிகமாக இருக்குமே தவிர சதைப்பற்று இருக்காது.

வெண்டைக்காய்

வெள்ளையும் இளமஞ்சளும் கலந்து மயக்கும் வெண்ண்டைக்காயை விட பச்சைப்பசேலென மினுக்கும் காய்கள்தான் சிறந்தவை. வெண்டைக்காய் காம்புப் பகுதியில் இருந்துதான் முற்றத் துவங்கும். எனவே காம்பை உடைத்துப் பார்த்து வாங்கலாம்.

உருளை

முளைவிட்ட காய்களையும் ஆங்காங்கே பச்சை நிறம் பூசியிருக்கும் காய்களையும் ஒதுக்குவது நல்லது. செம்மண்ணில் விளைந்த உருளையில் இனிப்புச்சுவை மிகுந்து இருக்கும்.

கத்தரி

தடித்த காம்புள்ள கத்தரிதான் பிஞ்சு. காம்பு மெலிந்திருந்தாலோ, காயை அழுத்திப் பார்த்தால் கெட்டிப்பட்டிருந்தாலோ அவற்றை மறுத்துவிடுங்கள்.

சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால் அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்க்கும் உத்தி ஊரறிந்த ரகசியம். ஆனால் உருளைக்கிழங்குக்குப் பதில் சோயா உருண்டைகளை வேகவைத்துச் சேர்ப்பதும் கைமேல் பலன் தரும். சோற்று உருண்டையைப் போட்டாலும் உப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது.

டீ போடும்போது கடைசியில் சர்க்கரை சேர்ப்பதுதான் வழக்கம். இதையே தலைகீழாக முயற்சிக்கலாம். முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரை சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு டீத்தூள் சேர்த்து வடிகட்டி, சூடான பால் சேர்த்துப் பாருங்கள். டீ திடமாகவும், சுவையாகவும் இருக்கும். இதில் இன்னொரு நல்லதும் இருக்கிறது. இப்படி முதலிலேயே சர்க்கரை சேர்ப்பதால் டீத்தூளின் கரை பாத்திரத்தில் ஒட்டாது, பாத்திரத்தைக் கழுவுவது எளிது!

வெண்ணெய் காய்ச்சும்போது கறிவேப்பிலை அல்லது முருங்கை இலையைப் போட்டு காப்ச்சுவதுதான் வழக்கம். அதற்குப் பதிலாக வெண்ணெய் காய்ச்சி இறக்கும் போது ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போடுங்கள். நெய் அருமையான மணத்துடன் இருப்பதுடன், கசக்கவும் செய்யாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x