Last Updated : 24 Nov, 2013 12:00 AM

 

Published : 24 Nov 2013 12:00 AM
Last Updated : 24 Nov 2013 12:00 AM

தீரமிக்க வண்ணத்துப் பூச்சிகள்

பாட்ரியா மெர்சிடிஸ் மிரபல், மினர்வா அர்ஜெண்டினா மிரபல், மரியா தரஸா மிரபல் இந்த மூன்று சகோதரிகாளும் டொமினியா நாட்டின் சாதரண குடிமக்கள். ஓர் எளிய விவசாயின் மகள்கள். ஆனால் பின்னாட்களில் அவர்கள் உலகப் பெண்களுக்கு உதாரணமாகினர். ஜனநாயகத்திற்காக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்காகப் போராடி, அந்தப் போராட்டத்திற்குத் தங்களையே அர்ப்பணித்து வரலாறு ஆனார்கள்.

வலிமை தந்த கல்வி

மிரபல் சகோதரிகள் என இன்று நினைவுகூரப்படும் இவர்களின் வாழ்க்கை டொனிமியாவின் சல்சிடொ நகரத்தில் கழிந்துகொண்டிருந்தது. அவர்களுடைய தந்தை மிரபல் ஃபெர்ணாண்டஸ், தாய் ரியாஸ் கமிலா இருவருமே பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட அந்தக் காலத்திலேயே தங்கள் மகள்களுக்குக் கல்வியறிவு கொடுக்க வேண்டும் என நினைத்தனர். மிரபல் சகோதரிகளுக்குக் கிடைத்த இந்தக் கல்வியறிவுதான் அவர்கள் தங்கள் நாட்டின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்க்கும் வலிமையைக் கொடுத்தது.

ஸ்பெயின் ஆட்சியில் 1930ஆம் ஆண்டு டொம்னிசியன் நாடு விடுதலை அடைந்தது. ஆனால் போராட்டத் தளபதி ட்ரூஜில்லோ மோலீனாவின் முகம் மாறியது. மக்கள் தலைவனாகப் பொறுப்பெற்றவர், சர்வாதிகாரியானர். சுதந்திர உணர்வை அனுபவிப்பதற்குள் அம்மக்கள் சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டனர். நாட்டுக்காகச் சில காரியங்களைச் செய்தாலும் அவரின் ஆட்சி அதிகாரம் மக்களுக்கு எதிராகப் பாயத் தொடங்கியது. தன் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் அளித்தார். ஊழல் பெருக்கெடுத்தது. ஆட்சிக்கு எதிர்ப்பு வலுத்தது. எதிர்க்கும் அனைவரையும் கொன்றழித்தார் ட்ரூஜில்லோ. கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக அரசியல் ரீதியான இயக்கங்களை அறிவாளர்கள் முன்னெடுத்தனர்.

தலைமறைவு இயக்கத்தின் உதயம்

இந்தச் சூழ்நிலையில் சகோதரிகளில் முதலில் மினர்வா மிரபல் மாறுபட்ட அரசியல் கருத்துகளினால் ஈர்க்கப்படுகிறார். ட்ரூஜில்லோ வுக்கு எதிரான ஒரு தலைமறைவு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார். மினர்வா சட்டம் படித்திருந்ததால் ஜனநாயகத்திற்கு ஆதரவான கருத்துகளின் மீது அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். 1940இல் பிர்சிலஸ் ஃப்ரான்ஸ்கோ என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இவர் Popular Socialist Partyயின் நிறுவனர். இவரது செயல்பாட்டால் பல முறை கைதுசெய்யப்பட்டுள்ளார். இவருடனான உரையாடல்கள் மூலம் ஈர்க்கப்பட்டு மினர்வா, தீவிரமான அரசியல் செயல்பாட்டாளர் ஆனார்.

மினர்வா அறிவு அழகுடன் காத்திரமான பெண்ணாக இருந்தார். இவர் மேல் ட்ரூஜில்லோவுக்கு விருப்பம் இருந்தது. ஆனால் மினர்வா அதை நிராகரித்துவிட்டார். இதற்குப் பழிவாங்கும் பொருட்டு சட்டப் படிப்பு முடித்தபோதும் வழக்கறிஞராகப் பணியாற்ற அவர் அனுமதிக்க ப்படவில்லை.

சகோதரியின் வழியில்

மினர்வாவின் அரசியல் செயல்பாடுகள் மற்ற இரு சகோதரிகளுக்கும் ஊக்கம் அளித்தது. இவர்கள் மூவரும் இணைந்து போராடத் தொடங்கினர். மிரபல் சகோகதரிகள் திரமிக்க வண்ணத்துப்பூச்சிகள் என்றழைக்கப்பட்டனர். இவர்களின் போராட்டம் ட்ரூஜில்லோவுக்கு மிகப் பெரிய சவாலாக ஆனது. “ட்ரூஜில்லோவுக்கு இரு பெரிய பிரச்சினைகள் உள்ளன; ஒன்று தேவாலயம். மற்றொன்று மிரபல் சகோதரிகள்” என்னும் கூற்று அப்போது பிரபலமாக இருந்தது. மிரபல் சகோதரிகள் பல முறை கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் கணவர்கள், குழந்தைகள் அனைவருமே சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். நாட்டுக்கான போராட்டத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை, எளிய சந்தோஷங்களை இழந்தனர்.

1960ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள், மிரபல் சகோதரிகள் சிறையில் உள்ள தங்கள் கணவன்களைச் சந்தித்துத் திரும்பும் வழியில் விபத்தில் மரணமடைந்தனர். ஆனால் அது இயற்கையான விபத்து அல்ல. அதிபர் ட்ரூஜில்லோவின் ரகசியப்படைகளின் நடவடிக்கை என்பது பின்னால் நிரூபணம் ஆனது. மிரபல் சகோதரிகளின் மரணம், மக்கள் மத்தியில் பெரும் அலையை எழுப்பியது. உலக நாடுகளின் கவனம் திரும்பியது.

அவர்கள் இறந்து ஆறு மாத காலத்திற்குள் மாபெரும் மக்கள் புரட்சி வெடித்தது. அந்தப் புரட்சி ட்ரூஜில்லோவின் படுகொலையில் போய் முடிந்தது. இன்றும் மிரபல் சகோதரிகள் தங்கள் தீரத்திற்காக டொமினிசிய மக்களால் நினைவுகூரப் படுகின்றனர். இவர்களின் வாழ்க்கையை டொம்னிய-அமெரிக்க எழுத்தாளர் ஜூலியா அலார்வஸ் In the time of the Butterflies என்னும் பெயரில் நாவலக்கியுள்ளார்.

இக்கதை இதே பெயரில் படமாகியுள்ளது. 1980ஆம் ஆண்டு முதல் இவர்களின் நினைவுநாள், பெண்களுக்கு எதிரான வன்முறை நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் கடைபிடிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x