Published : 07 Apr 2019 10:22 AM
Last Updated : 07 Apr 2019 10:22 AM

படிப்போம் பகிர்வோம்: வழிகாட்டும் சுயமரியாதைப் பெண்கள்

நாட்டின் விடுதலைக்காகத் தலைவர்கள் முழங்கியதைக் கேட்டுக்கொண்டிருந்த பெண்களை தங்களுடைய சுயமரியாதை மேடைகளில் ஏற்றி விடுதலை, அரசியல், பாலினச் சமத்துவம் ஆகியவற்றைப் பேசவைத்தவர் பெரியார். அவரது சுயமரியாதைக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுக் களத்தில் துணிந்து போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள் பெண்கள்.

அடுப்படியே கதியென நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்களுக்கு அரசியல் கற்றுக்கொடுத்தார் பெரியார். இப்படி கட்டுப்பாடுகளைத் தகர்த்து களம்கண்ட பெண்கள் குறித்து ‘கருஞ்சட்டைப் பெண்கள்’ எனும் தலைப்பில் நூலாகத் தொகுத்திருக்கிறார் பெரியாரியக் கொள்கையில் வளர்ந்தவரும் சமூகச் செயற்பாட்டாளருமான ஓவியா.

பெண் ஏன் இரண்டாம்தரமாக நடத்தப்படுகிறாள், மனித சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்தே பெண், ஆணுக்கு அடிமையாக இருந்துவருகிறாளா, பெண் எப்போது ஆணின் சொத்தாக மாற்றப்பட்டாள் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு மாமேதை ஏங்கெல்ஸின் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூலை அடிப்படையாகக்கொண்டு பதில் சொல்லியிருக்கிறார் ஓவியா.

 ‘தொல்காப்பியமும் மனுதர்மமும்’ எனும் பகுதியில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இவ்விரு நூல்களிலும் பெண்ணடிமைத்தனக் கருத்துகள் எப்படிக் கூறப்பட்டுள்ளன, அவை சமூகத்தில் பெண்கள் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தின என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

மது ஒழிப்புப் போராட்டத்தின் முன்னோடிகள்

ஆண்கள் சூழ் அரசியல் களத்தில் பெண்களை முதன்முதலில் தன்னுடைய குடும்பத்திலிருந்து முன்னிறுத்தியவர் பெரியார். சாதி, மதம் ஆகியவற்றின் பெயரால் பெண்கள் எப்படி அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை விளக்கி நாகம்மையாரை அரசியல் தளத்துக்கு பெரியார் கொண்டுவந்தார். ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்ற கண்ணோட்டத்துடன் வளர்ந்த நாகம்மையார்தான், பிற்காலத்தில் பெரியார் சிறையிலிருந்தபோது கள்ளுக்கடை மறியலை வீரத்துடன் முன்னின்று நடத்தினார்.

1920-களில் நாகம்மையாரும் பெரியாரின் சகோதரி கண்ணம்மாளும் தொடங்கிய மது ஒழிப்புப் போராட்டம்தான் இன்றளவும் நடைபெறும் டாஸ்மாக் கடைப் போராட்டங்களுக்கு முன்னோடியாக உள்ளது. கள்ளுக்கடைப் போராட்டத்தோடு மட்டும் நாகம்மையாரின் பங்கு முடிந்துவிடவில்லை. பெரியாரின் வழியில் தன்னையும் சுயமரியாதை இயக்கத்துடன் இணைத்துக்கொண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்ட பிறகு, அதைத் தலைமையேற்று நடத்தியவர் நாகம்மையார். பெரியாரின் தங்கை கண்ணம்மாள், பத்திரிகையாளராக இருந்து சிறை சென்ற முதல் பெண். ‘குடி அரசு’ ஏட்டின் பதிப்பாசிரியராக இருந்த கண்ணம்மாள், பெயரளவுக்கு மட்டும் செயல்படாமல் ‘குடி அரசு’, ‘ரிவோல்ட்’ ஆங்கில நாளிதழ் போன்றவற்றில் மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் சடங்குகளை எதிர்த்தும் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதியுள்ளார். சுயமரியாதை மேடைகளில் முக்கியப் பேச்சாளராகவும் இருந்துள்ளார்.

கைக்குழந்தையுடன்

சிறை சென்றவர்கள்

தேவதாசி முறை ஒழிப்புக்காகவும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். 60 வயதிலும் 577 கி.மீ. தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர்.

இந்தப் போராட்டத்தின்போது 38 பெண்கள் கைக்குழந்தையுடன் சிறை சென்றது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய தேசியக் கொடியைப் புடவையாக அணிந்துகொண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான நூதன முறையில் போராட்டத்தை மேற்கொண்டவர் ராமாமிர்தம் அம்மையார்.

போராளிப் பெண்கள்

பழமைவாதம் வேரோடிப்போயிருந்த காலத்தில் தாலி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர் குஞ்சிதம் குருசாமி. சிறந்த பேச்சாளரான குஞ்சிதம் குருசாமி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தேசிய மகளிர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பூ, பொட்டு வைக்காமல் தாலி அணியாமல் இருந்த காரணத்துக்காகவே ஆசிரியர் வேலையை இழக்க நேரிட்டது.

சுயமரியாதை இயக்கத்தின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த மீனாம்பாள் சிவராஜ். இவர், அந்தக் காலத்திலேயே ஆதி திராவிட மக்களுக்கான இயக்கங்களை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்துள்ளார்.

திருச்சிக்கு எப்போது சென்றாலும் பெரியார் வரச்சொல்லி பார்க்கிற முக்கிய நபராக இருந்துள்ளார் வீரம்மாள். காரணம், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரம்மாள் படிப்பில் ஆர்வம் கொண்டவர். ஆனால்,  ஒடுக்கப்பட்டவர் என்ற காரணத்துக்காகவே அவர் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

ஆனால், மனம்கலங்காத வீரம்மாள் தினமும் எட்டு கி.மீ. தொலைவுக்கு நடந்துசென்று பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். இவர் 1943-ல் தொடங்கிய ஆதி திராவிடர் நலத் தொடக்கப்பள்ளி தற்போதும் செயல்பட்டுவருகிறது.

அந்தக் காலத்தில் சாதி மறுப்புத் திருமணமும் மறுமணமும் மிகப்பெரும் சமூக மறுமலர்ச்சி செயல்பாடுகளாகக் கருதப்பட்டன. சித்த மருத்துவரான தருமாம்பாள் தன்னுடைய வீட்டு வாசலில், ‘இங்கு சாதி மறுப்பு, கைம்பெண் மறுமணம் செய்துவைக்கப்படும்’ எனப் பலகையில் எழுதிவைத்திருந்தார்.

பெரியாருக்குபிறகு திராவிடர் கழகத்தை வழிநடத்திய மணியம்மையார், நீலாவதி அம்மையார், தோழர் மிரண்டா கஜேந்திரன், சத்தியவாணி முத்து என எண்ணற்ற கருஞ்சட்டைப் பெண்களின் வரலாற்றை இந்தப் புத்தகம் சுமந்துவந்துள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் பெண்கள், பெண்ணியத்தையும் பெரியாரியத்தையும் வெறும் பேச்சுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அவற்றைத் தங்கள் வாழ்க்கை நெறியாகவும் கடைப்பிடித்தவர்கள் என்பதாலேயே இந்நூல் கவனத்தை ஈர்க்கிறது.

ஆசிரியர்: ஓவியா

வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம்,

சென்னை-87.

தொடர்புக்கு: 9940407468

விலை: ரூ.130/-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x