

அன்று காலை திறன்பேசியைத் திறந்தவுடன் ஒரு வாட்ஸ்அப் குழுவில் என் பெயர் இணைக்கப்பட்டு இருந்தது. நந்தகோபால் மகன் திருமணம் என்று குழுவுக்குப் பெயரிடப்பட்டு, அதில் ஒரு திருமணப் பத்திரிகை பகிர்ந்துகொள்ளப்பட்டு இருந்தது. கீழே பலரும் வாழ்த்துகளை விதவிதமான உணர்ச்சிப் பொம்மைகள் போட்டுத் தெரிவித்திருந்தனர். நந்தகோபால் யார் என்பது பிடிபடவில்லை. பத்திரிகையைப் பெரிதாக்கிப் பார்த்தேன். இறந்துபோன என்னுடைய பெரியப்பாவின் பெயரைப் பார்த்ததும் புரிந்தது, அது பெரியப்பா மகன் கோபாலுடைய மகனின் திருமணம் என்று. நந்தகோபாலை கோபால் என்றே எனக்குத் தெரியும்.
திருமணத்துக்கு இன்னும் பத்து நாட்கள் இருந்தன. அந்தக் குழுவில் புதிதுபுதிதாகப் பலர் சேர்க்கப்பட்டனர், வாழ்த்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. நானும் என் வாழ்த்துகளைப் பகிர்ந்தேன். திருமணத்துக்குப் போவதா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது. போனில் அழைப்பு வந்தால் போகலாம் என்று நினைத்தேன். பத்து நாட்களுக்குப் பிறகு திருமண போட்டோக்கள் சில பகிர்ந்துகொள்ளப்பட்டன. அடுத்த இரண்டு நாட்களில் குழு கலைக்கப்பட்டுவிட்டது.