

பள்ளிப் பருவதில் எங்கள் ஊரில் உள்ள நூலகத்துக்கு நானும் என் தோழிகளும் சென்று வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு வருவோம். அதுவே என்னை வாசித்தலுக்குத் தூண்டியது. தமிழ் இலக்கியத்தைப் படித்ததால் ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், கல்கி, ராஜம் கிருஷ்ணன், வைரமுத்து, சிவகாமி போன்ற பல எழுத்தாளர்களின் நூல்கள் பாடத்திட்டத்தின் வழியே எனக்கு அறிமுகமாயின. என்னுடைய பேராசிரியர்கள் பல எழுத்தாளர்களின் நூல்களைப் பரிந்துரைப்பார்கள். அவற்றை எப்படியாவது தேடிப்பிடித்துப் படித்துவிடுவேன்.
என் முனைவர்பட்ட ஆய்வை ஐந்து ஆண்டுகள் மேற்கொண்டேன். அந்நாட்களில் ஒருநாளின் பாதியைப் பல்கலைக்கழக நூலகத்தில்தான் செலவிடுவேன். அப்படித்தான் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பாமரன், பிரபஞ்சன், சாருநிவேதிதா, ராஜ்கௌதமன், நாஞ்சில் நாடன், பெருமாள் முருகன் எனப் பலரது எழுத்துகளையும் வாசிக்கத் தொடங்கினேன்.