

மூத்த கல்வியாளரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான வசந்தி தேவி (87), ஆகஸ்ட் 1 அன்று காலமானார். இவர் 1938இல் திண்டுக்கல்லில் பிறந்தவர். தமிழ்நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்த முதல் பெண் இவர். துணை வேந்தராகப் பணியாற்றிய காலத்தில் சமூகக் கல்வியைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக்கினார். சென்னை ராணி மேரி கல்லூரியில் பேராசியராகப் பணியாற்றிய இவர், பிறகு கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார்.
பணி ஓய்வுக்குப் பின் தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். 2002 – 2005 வரை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவராகவும் செயல்பட்டார். ‘பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்க’த்தைத் தொடங்கி அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி கல்விப் பணியாற்றிவந்தார். தமிழக அரசின் பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்தும் பங்களித்திருக்கிறார். பெண்ணுரிமை, குழந்தைகள் உரிமை, மேம்பட்ட கல்வி ஆகியவற்றுக்காககத் தொடர்ந்து பணியாற்றிவர் வசந்தி தேவி.