

திருப்பூர் ரிதன்யா, திருவள்ளூர் பொன் னேரியைச் சேர்ந்த லோகேஷ்வரி, திருவண்ணாமலை கீழ்பெண் ணாத்தூர் உமாதேவி எனப் பெண்களின் தொடர் தற்கொலைகள் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளன. இவர்களுக்கு ஓர் ஒற்றுமை இருக்கிறது. இந்த மூன்று பெண்களும் திருமணமானவர்கள்; இவர்களது மரணம் திருமணம் - அது சார்ந்த பிரச்சினைகள் தொடர்பானது.
பெண்களின் தற்கொலை தொடர்பாக 2003 -2004இல் உலகச் சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலகம் முழுவதும் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்கொலைக்கு முயன்று மருத்துவனமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 340 பேரை அந்த ஆய்வுக்காகச் சந்தித்துப் பேசினேன். வெளிநாடுகளில் பெண்கள் திருமண உறவைப் பாதுகாப்பு அளிப்பதாகக் கருதும் நிலையில் இந்தியாவில் அப்படி அல்ல என்று இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்தது.
பொதுவாகவே தற்கொலைகளை, சம்பந்தப்பட்ட நபரின் மனநலப் பிரச்சினையாக மட்டுமே சுருக்கிவிடும் போக்கும் மக்கள் மத்தியில் இருக்கிறது. மன அழுத்தம், மனச் சோர்வு உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று பலர் நம்புகின்றனர். ஆனால், 2019இல் 18 – 45 வயதுக்கு உட்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு முடிவின்படி 7 சதவீதத்தினர் மட்டுமே மனநலப் பிரச்சினைகளால் தற்கொலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர்.