

சென்ற வாரம் செய்தித் தாள்களைத் திருப்பிக் கொண்டிருந்தபோது ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது. ஹரியாணாவில் உள்ள குருகிராமில் இளம்பெண் ஒருவர் திருமணமாகி சில மாதங்களில் தன் கணவனிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். இருவரும் மொட்டைமாடியில் இருக்கும்போது, “நான் இங்கிருந்து வழுக்கி விழுந்துவிடுகிறேன். நீ என்னைக் காப்பாற்றுகிறாயா இல்லையா என்று நான் பார்க்கப் போகிறேன்” என்றார். அன்பின் பொருட்டு அந்தப் பெண் இப்படியொரு திட்டம் வகுத்ததுதான் மிகவும் துயரமான விஷயம். ஏனெனில், அவருடைய கணவரால் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற இயலவில்லை.
கணவன் தன்னைக் காப்பாற்றி னால்தான் அவருக்குத் தன் மீது அன்பு இருப்பதாக அந்தப் பெண்ணிடம் யார் சொன்னார்கள்? எந்த மாதிரியான சமூகச் சூழ்நிலை, அன்பிற்கான அளவுகோலாகத் தன்னைக் காப்பாற்றும் கணவனின் வடிவை அவரை எதிர்பார்க்க வைத்தது என்பது எனக்குப் புரியவில்லை. இங்கு காதல் அல்லது திருமணம் என்பதே அளவீட்டு அடிப்படையில் நிகழ்ந்துகொண்டி ருப்பதாகத் தோன்றுகிறது. இதுதான் இன்றைய தேதியில் நம் சமூகத்தில் காதலின் நிலை.