

பாரம்பரிய உணவு வகைகள், பானங்கள் என்று பட்டையைக் கிளப்புகிறார் ரெனால்ட். பாளையங்கோட்டை மேடை காவல் நிலையப் பகுதியில் ‘நெல்லை கைப்பக்குவம்’ என்கிற பெயரில் சிற்றுண்டிக் கடை நடத்திவருகிறார் ரெனால்ட். நவதானிய – பாரம்பரிய உணவு முறையை மீட்டெடுக்கும் வகையில் இவர் தயாரிக்கும் உணவுப் பொருட்களுக்கு ரசிகர்கள் அதிகம். இவரது கைப்பக்குவத்தைப் பாராட்டாதவர்கள் குறைவு.
மக்களிடையே ஆரோக்கிய உணவுப் பழக்கம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் வேளையில், அதையே தன் வெற்றிக்கான அடித்தளமாகப் பயன்படுத்திக்கொண்டார் ரெனாலாட். இவரது சிற்றுண்டிக் கடையில் நாள் தவறாது பிற்பகல் தொடங்கி இரவு வரையிலும் விதம் விதமான உணவு வகைகள் சுடச்சுடத் தயாராகிவிடும். குதிரைவாலி வெஜ் கட்லெட், சிறுதானிய பிரவுனி, சிறுதானிய லட்டு, சிறுதானிய முறுக்கு, எண் மூலிகை காபி, கம்புப் பால், தினைப் பாயசம், முருங்கை சூப், தட்டாம்பயறு வடை, சீனிக்கிழங்கு பணியாரம், மாப்பிள்ளை சம்பா தோசை எனப் பலகாரங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இவையெல்லாம் 10 ரூபாயில் தொடங்கி 40 ரூபாய் வரை சாமானியரும் வாங்கக்கூடிய விலையில்தான் கிடைக்கின்றன.