

சமீப காலமாக இணையத்திலும் தற்கொலை வழக்குகளிலும் மிக அதிகமாக பேசப்படும் விஷயம் திருமணத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படக்கூடிய பாலியல் வன்முறை. திருமணம் என்பதே ஒரு பெண்ணோடு உறவு கொள்வதற்கான ஒரு அனுமதிச் சீட்டாகப் பார்க்கப்படும் சூழலில், ஒரு பெண்ணின் சம்மதம் இன்றி அல்லது பெண்ணின் உடலுக்கு அதிக வேதனையைத் தரும் செயல்களில் ஈடுபடுவது என்பது மிகக் கொடுமையான விஷயமாகக் கருதப்படுகிறது.
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணின் உடல் எங்கும் காயங்கள் இருந்ததாகவும் கைகள் கட்டப்பட்ட நிலையில் அவரது கணவர் அவரிடம் உறவுக்கு வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது போன்றவை அதீதமாகப் பேசப்படும் விஷயமாக இதுவரை இருந்ததில்லை. திருமணம் செய்துகொண்டால் கணவன் ஒரு பெண்ணின் உடலை எப்படியானாலும் ஆட்கொள்ளலாம் என்கிற ஆணாதிக்கச் சிந்தனைதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.