

பொதுவாகப் பெண்கள் கரப்பான்பூச்சி, பல்லி போன்றவற்றைப் பார்த்தே பயந்து நடுங்குவார்கள் என்றொரு கற்பிதம் இருக்கிறது. சில திரைப்படங்களில் நாயகிகள்கூடப் பல்லியைப் பார்த்து பயந்து நடுங்குகிறவர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கேரளத்தைச் சேர்ந்த தீயணைப்புத் துறை அலுவலர் ரோஷிணி, இதுபோன்ற கற்பிதங்களைத் தன் துணிச்சலான செயலால் எள்ளி நகையாடியிருக்கிறார்.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஓடையின் கரையில் இருந்த 14 – 15 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தைச் சில நிமிடங்களிலேயே லாகவமாக அவர் மீட்ட காணொளி பலராலும் பார்க்கப்பட்டது. அவரது வீரத்தை வியந்தும் போதுமான பாதுகாப்புக் கருவிகள் இல்லாததைக் கண்டித்தும் சமூக ஊடகங்களில் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். தீயணைப்புத் துறையில் எட்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர் இதுவரை 800க்கும் மேற்பட்ட நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளைப் பிடித்திருக்கிறார். கேரளத்தின் தெற்குப் பகுதியில் ராஜநாகங்கள் குறைவு என்பதால் இதுதான் தனது முதல் ராஜநாக மீட்பு என ரோஷிணி தெரிவித்திருக்கிறார்.