

ரிதன்யா - இந்தப் பெண்ணின் பெயர்தான் கடந்த வாரம் முழுவதும் சமூக ஊடகங்களில் மிக அதிகமாகப் பேசப்பட்ட ஒரு பெயர். தற்கொலைக்கு முயன்று வாகனத்துக்குள் பிணமாகக் கிடந்தவரை மீட்டபோதுதான் அவருக்குத் திருமணமாகி இரண்டு மாதங்களே ஆகியிருக்கிற விஷயமும், திருமண வாழ்வில் வரதட்சணை வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததால் தாங்க முடியாத துயரத்தினால் வாழ்வை முடித்துக்கொண்டதும் தெரியவந்தது. காரில் இருந்து அவரை மீட்பதற்குள் அவருடைய அம்மா கதறிய கதறல் நம் காதுகளில் காலம் முழுக்க ஒலித்துக்கொண்டிருக்கும் அவலக் குரல் என்றாலும், இப்படியான அவலக் குரல்கள் நமக்குப் புதியன அல்ல.
வரதட்சணைக் கொடுமை காரணமாக 2021ஆம் ஆண்டு கேரளத்தில் விஸ்மயா என்கிற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டார். குடும்ப வன்முறையும் வரதட்சணை கொடுமையுமே விஸ்மயாவின் மரணத்துக்குக் காரணம் என அவருடைய பெற்றோர் புகாரளிக்க, விஸ்மயாவின் கணவர் கிரண் குமாருக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அது மட்டுமல்லாமல் விஸ்மயாவின் பெற்றோரையும் குறிப்பிட்டு, எந்தப் பெண் குழந்தையும் திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டில் ஆபத்து என்று சொன்னால் உடனடியாகப் பெற்றோர் அதைக் காதுகொடுத்துக் கேட்டு ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.