

குமரி மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமம்தான் எங்கள் ஊர். எங்கு பார்த்தாலும் ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும்தான். செருப்பு அணிந்திருந்தால் அவர்கள்தான் பணக்காரர்கள் என்று சொல்லும் அளவுக்கு ஏழ்மை இருந்தது. ஆனாலும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் ஓர் உயர்நிலைப் பள்ளியை உருவாக்கியிருந்தார்கள்.
ஊருக்குத் தெற்கே என் மாமா ஒருவர் அரிசி ஆலை வைத்திருந்தார். என் அம்மா அரிசி வியாபாரம் செய்பவர். தினந்தோறும் அவித்து, காய வைத்த நெல்லைச் தலைச் சுமடாகச் சுமந்து ஆலைக்குக் கொண்டு செல்வார். ஆறாம் வகுப்பு மாணவியான நானும் பல நாட்கள் என் அம்மாவுடன் நெல் சுமந்து செல்வதுண்டு. அங்கு தினத்தந்தி வாங்குவார்கள். தலை சுமடை இறக்கி வைத்ததும் ஓடிச் சென்று நாளிதழைப் படிப்பேன். அதன் இரண்டாம் பக்கத்தில் பிரசுரமாகும் ‘கன்னித்தீவு’ படக்கதைதான் என் வாசிப்பின் ஆரம்பம்.