தண்ணீர் தண்ணீர் | ஆயிரத்தில் ஒருவர்
எங்கள் பகுதியில் இளம் தம்பதி ஒரு வயது குழந்தையுடன் ஓலைவேய்ந்த சிறிய வீட்டில் வசித்துவந்தனர். இருவரும் பெற்றோரை இழந்து, ஆசிரமத்தில் வளர்ந்து பிறகு திருமணம் செய்துகொண்டனர். கணவர் முனியன், மனைவி தாரா இருவரும் 10ஆவது வரை மட்டுமே படித்திருந்தனர். அப்போது எங்கள் பகுதியில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பைப் பெரிய கட்டிட கான்ட்ராக்டர் ஒருவர் கட்டிக்கொண்டு இருந்தார். அவரை அணுகிய இந்தத் தம்பதி, அவரிடம் தங்கள் வறுமை நிலையைக் கூறி தங்களுக்குக் காவலாளி வேலையைக் கொடுத்து, தங்கிக்கொள்ள இடமும் கொடுக்குமாறு கேட்டனர். கட்டிட கான்ட்ராக்டர் ஒப்புக்கொள்ள, கொட்டகையிலேயே தங்கி கட்டிட வேலைகளைக் கவனித்துக்கொண்டு இருந்தனர்.
கட்டப்பட்டுக்கொண்டிருந்த குடியிருப்புக்கு அருகில் இருந்த வீடுகளில் பச்சிளம் குழந்தைகளைக் குளிப்பாட்டும் வேலையை தாராவும், அவர்களது நான்கு சக்கர - இருசக்கர வாகனங்களைக் கழுவித் துடைக்கும் வேலையை முனியனும் செய்தனர். அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டதும் சொல்லியபடி முனியன் - தாராவுக்கு அவுட் ஹவுஸ் கட்டிக்கொடுத்தார் கட்டிட கான்ட்ராக்டர். அந்தக் குடியிருப்பில் கட்டப்பட்டிருந்த நீச்சல் குளத்தைத் தூய்மைப்படுத்தும் பணியும் முனியனுக்குக் கிடைத்தது.
