

தேனிலவுக்குச் சென்றபோது ஒரு பெண் தன் கணவனை, தன் காதலனோடு சேர்ந்து கொலை செய்த சம்பவத்தைப் பற்றிச் சில வாரங்களுக்கு முன் நாம் கேள்விப்பட்டிருப்போம். அதன் கோரத்தை நாம் வாசித்து அறிந்தபோது ஏற்பட்ட அதிர்வைக் காட்டிலும், இந்த வாரம் தமிழ்நாட்டில் ஒரு காதல் ஜோடியைப் பிரிப்பதற்காகப் புறச்சூழலில் எத்தனை அதிகார வர்க்கங்கள் தங்கள் முகங்களைக் காட்டியிருக்கின்றன என்பதை வாசித்தபோது அதிகமாகவே அதிர்ச்சி ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஏதோவொரு விதத்தில் மூன்றாம் நபராக உள்ளே வந்த முன்னாள் பெண் காவலர் ஒருவரும் கடத்தல் போன்ற விஷயங்களில் தலையிட்டது ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போலத்தான் இருந்தது.
காதலுக்கு எதிர்ப்பு: பெண்கள் எல்லாரும் நல்லவர்கள், அவர்கள் அனைவரும் பலவீனமானவர்கள், அவர்கள் மீது எப்போதும் குற்றம் இழைக்கப்படுகிறது என்பது போன்ற பல்வேறு விதமான கருத்துகள் நம் சமூகத்தில் சொல்லப்பட்டுவருகின்றன. பொதுப்பார்வையில் இதுபோன்ற சம்பவங்களை முன்வைத்துப் பார்த்தால், எல்லாக் காலத்திலும் அது அப்படியாக இல்லை என்பது புலனாகிறது.