

பெண்களின் உடல் அரசியலில் மிக முக்கியமான கூறு, அவர்களது கருப்பை குறித்த அரசியல் புரிந்துணர்வு. ஓர் உடல் உறுப்பில் அரசியல் எப்படிக் கலக்கும் என்கிற கேள்வியை மிகச் சாதாரணமாக யாரும் முன்வைத்துவிடக்கூடும். என்றாலும், பெண்களின் அவயங்களில் கருப்பை மிக அதிகமாகச் சுரண்டப்படும் மானுட உறுப்பாக இருப்பதை நாம் மறுக்கவே இயலாது. திருமணம் என்கிற பெயரால் பெண்ணின் விருப்பமின்றி நடக்கக்கூடிய தாம்பத்திய உறவும், அதனால் அவள் கர்ப்பமடைவதும் இந்தச் சுரண்டலில் அடக்கம்.
எந்த வாரம் எந்தத் திரைப்படம் ஜெயித்தது அல்லது தோற்றது என்பதை அகில இந்திய ரீதியாகத் தெரிந்துகொள்ளத் துடிக்கும் ஒரு சாமானிய இந்தியருக்கு, மகாராஷ்டிர மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 848 பெண்கள் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்கள் என்னும் செய்தி பெரும்பாலும் தெரிந்திருக்க இயலாது. ஏன் அவர்கள் தங்கள் கருப்பையை அகற்றினார்கள் என்பதற்குச் சொல்லப்படும் காரணம் மிகுந்த அதிர்ச்சி தரக்கூடியது. அவர்கள் அனைவருமே பக்கத்து ஊர்களில் இருக்கக்கூடிய கரும்புத் தோட்டங்களில் வேலை செய்கிறவர்கள். குறிப்பிட்ட காலத்துக்கு அந்தந்த ஊர்களுக்குச் சென்று வேலை செய்யும் நிலையில் இருப்பதால், தாங்கள் கர்ப்பமாகிவிடக் கூடாது என்கிற காரணத்தாலேயே அவர்கள் கருப்பையை நீக்கியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், கருப்பை நீக்கிய பெண்களில் 477 பேர் 35 வயதைத் தாண்டாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.