

பள்ளிப் பருவத்திலேயே புத்தக வாசிப்பைத் தொடங்கிவிட்டேன். எங்கள் வீட்டில் அப்போது சிறு நூலகமே இருந்தது. டாக்டர் மு.வரதராசனின் ‘நெஞ்சில் ஒரு முள்’ நூலில் இருந்துதான் வாசிப்பைத் தொடங்கினேன். அவரது ‘அகல் விளக்கு’ சாகித்ய அகாடமிக்குத் தேர்வாகும் முன்பே படித்து வியந்திருக்கிறேன். அவரது ‘கள்ளோ? காவியமோ?’, ‘கரித்துண்டு’, ‘தம்பிக்கு’ ஆகியவை மறக்க முடியாத நூல்கள். அதன் பின் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’ ஆகியவை தமிழ் உள்ளவரை வாழும் நூல்கள். அவரைப் போலவே சரித்திரக் கதைகளை எழுதிய சாண்டில்யன் தனது வர்ணனைகளால் கவர்ந்தவர்.
இந்தக் காலக்கட்டத்தில் ஜெயகாந்தன் எழுதிய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படித்தேன். அவரது கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளும் எதார்த்தமான நடை என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. அதன் பின் அவரது தீவிர ரசிகையாக மாறி அவரது அனைத்து நூல்களையும் வாங்கிப் படித்தேன்.