

இன்று வரை மனதில் நீங்கா இடம்பிடித்தவர் என் ஆருயிர்த் தோழி லதாவின் அம்மா கோகிலாம்பாள்தான். அப்பப்பா என்ன ஓர் உழைப்பு, உறுதி, உற்சாகம். அவரிடம் பத்து நிமிடம் பேசினால் போதும்; நம்மையும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
அவருக்கு ஐந்து மகள்கள், இரண்டு மகன்கள். கணவரின் சொற்ப சம்பளத்தில் இத்தனை பேர் எப்படி உயிர் வாழ்வது? சாப்பாடு, துணிமணி, படிப்புச் செலவு, மருத்துவம் என்று எவ்வளவு செலவு இருக்கிறது. அதனால், நன்கு யோசித்து ஒரு முடிவெடுத்தார். தனக்குத் தெரிந்த தையல் கலையை மற்றவர்களுக்கும் கற்றுத்தர எண்ணி, முதலில் ஒரு தையல் இயந்திரம் வாங்கினார். வீட்டிலேயே ஓர் அறையில் தையல் வகுப்பு எடுக்க ஆரம்பித்தார். அக்கம், பக்கம் உள்ளவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வந்தனர். நானும் அவரிடம் கற்றுக்கொண்டேன். பொறுமையுடன் நிதானமாகச் சொல்லிக் கொடுப்பது அவரது சிறப்பு.