

சற்று தொலைவான இடத்தில் வேலையிலில் இருக்கும் மகளை அன்று (செப்டம்பர் 18, 2022) எத்தனை முறை அழைத்தும் தொடர்புகொள்ள இயலவில்லை என்று பதறிப்போனார் பிரேந்திர சிங். தன் மகள் அங்கிதா பண்டாரி பணிபுரிந்த ரெசார்ட் ஓட்டலுக்குப் போனார். மகள் அங்கு இல்லை. அந்தப் பரிதாபத்திற்குரிய தந்தை மூன்று காவல் நிலையங்களுக்கு அலைந்தார். தட்டிக் கழித்து விரட்டி அனுப்பினர். ஆறு நாள் கழித்து, செப்டம்பர் 24, 2022 அன்று ஊருக்குப் புறத்தே ஓடும் சில்லா கால்வாயில் இருந்து சடலமாகத்தான் கிடைத்தார் அங்கிதா. பேரிடர் நிவாரணப் படையினர்தான் சடலத்தை மீட்டனர்.
அங்கிதா, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அடித்துக் கொல்லப் பட்டார் என்பதை கோத்வார் அமர்வு நீதிமன்றம் கடந்த மே 29ஆம் தேதி உறுதிசெய்து தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா, அவரது கூட்டாளிகளான மேலாளர் சௌரப் பாஸ்கர், உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், மொத்தமாக 4 லட்சம் ரூபாய் அபராதம் இவர்களிடமிருந்து வசூலித்து, அங்கிதாவின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.