

சிறு வயதில் வார இதழ்களில் வரும் படக் கதைகளை மட்டும்தான் ஆர்வமாகப் படிப்பேன். என் இரண்டாவது அண்ணா நிறைய கதைப் புத்தகங்கள் படிப்பார். வார இதழ்களில் வரும் தொடர்கதைப் பக்கங்களைக் கிழித்து, அழகாக அடுக்கி அவரே ஊசி, நூல் கொண்டு தைத்துவிடுவார். தடிமனான அட்டை போட்டு, மேலே வண்ணப் பேனாக்களால் தொடர்கதையின் பெயர் எழுதி அருமையாக வைத்து இருப்பார். நான் பள்ளியில் படித்தபோது இந்தப் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பேன். ‘படித்துத்தான் பார்ப்போமே...’ என்று ஒரு கோடை விடுமுறை நாளில் எழுத்தாளர் மணியனின் ‘உன்னை ஒன்று கேட்பேன்’ நாவலைப் படித்தேன். அதுதான் நான் முதலில் படித்த நாவல். மிகவும் சுவாரசியமாக இருந்தது.
பிறகு ‘தேக்கடி ராஜா’ என்கிற சிறுவர் நாவலைப் படித்தேன். ஒரு சிறுவனும் யானையும் எப்படி நட்புடன் பழகி வாழ்கிறார்கள் என்பதை ஆசிரியர் அற்புதமாக எழுதியிருந்தார். சுவாரசியமாக எழுதுகிறாரே என வியந்துபோனேன். அந்தக் கதைக்கு ஓவியர் வரைந்த படங்களும் அருமையாக இருந்தன.