

பசியால் வாடும் பச்சிளம் குழந்தைகளின் பசிப் பிணி போக்குபவர் விசித்ரா செந்தில்குமார். பிபிஎம் பட்டதாரி. திருப்பூரைச் சேர்ந்தவர். தாய்ப்பால் தான விழிப்புணர்வைத் தனிநபராகத் தொடங்கி இன்றைக்குத் தாய், தந்தை, கணவர், மகன், சகோதரி, நண்பர்கள் ஆகியோரையும் இணைத்துக்கொண்டு அதை ஓர் இயக்கமாக மாற்றியிருக்கிறார்.
கண் தானம், ரத்த தானம், உடல் தானம் போன்றவை குறித்துச் சமூகத்தில் விழிப்புணர்வு இருந்துவரும் நிலையில், தாய்ப்பால் கிடைக்காமல் பசியால் வாடும் குழந்தைகளுக்கு உதவும் தாய்ப்பால் தானம் குறித்துப் பரவலான விழிப்புணர்வு இல்லை. அதை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறார் விசித்ரா.