

எழுபதுகளில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு மாமியின் வாழ்க்கை என்னை வெகுவாகக் கவர்ந்தது. தென்திருப்பேரை பார்வதி ஸ்டோர்ஸ் அருகில் வசிக்கும் கிருஷ்ணம்மாள் மாமி என்றால் அந்த ஊரில் தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். புன்முறுவல் பூத்த முகத்துடன் பணிவும் தன்னடக்கமும் ஒருங்கே கொண்டிருக்கும் மாமியின் ஒவ்வொரு செயலும் என்னை வியக்க வைக்கத் தவறியதில்லை.
தினமும் காலையில் சிறிது நேரம் கோயிலுக்குச் சென்று தன்னால் இயன்றவரை பூமாலை தொடுத்துத் தருகிறார். பின்னர் வீடு திரும்பியதும் முறுக்கு, தட்டை, ரிப்பன் பக்கோடா போன்ற பலகாரங்களைச் செய்வது, கறிவேப்பிலை பொடி, எலுமிச்சைப் பொடி போன்ற பொடி வகைகளைத் தயார் செய்வது, பிரசவித்த பெண்களுக்கும் பருவமடைந்த பெண்களுக்கும் ஆரோக்கியமான உணவு வகைகளைச் செய்துகொடுப்பது என்று பலப் பல வேலைகளைச் செய்கிறார். இவற்றோடு நிறுத்திக்கொள்ளாமல் குளியல் பொடி, ஆவாரம்பூ டீத்தூள் தயாரிப்பது என எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார்.