

எனக்கு 68 வயதாகிறது. தமிழ் படிக்கத் தெரிந்த நாள் முதல் இன்று வரை புத்தகம் வாசிப்பது தொடர்கிறது. என் அப்பா வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு இருந்த மனமகிழ் மன்றத்துக்கு வரும் எல்லாத் தமிழ்ப் பத்திரிகைகளையும் வீட்டுக்குக் கொண்டுவருவார்.
ஆரம்பத்தில் படிக்கத் தெரியாதபோது புத்தகத்தில் உள்ள படங்களை மட்டும் பார்ப்பேன். பிறகு படிக்கத் தெரிந்துகொண்ட பிறகு சின்ன சின்ன ஜோக்குகள் படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு சிறுகதைகள், தொடர்கதைகளைப் படித்தேன். இப்படிப் படித்துப் பழக்கம் ஆன பிறகு, எங்கள் கிராமத்து நூலகத்தில் இருந்து என் தம்பியைப் புத்தகங்கள் எடுத்துவரச் சொல்லிப் படித்தேன். ஏனென்றால், வயதுக்கு வந்த பெண்கள் இந்த மாதிரி பொது இடங்களுக்குச் செல்ல எங்கள் கிராமத்தில் அப்போது அனுமதி தர மாட்டார்கள். எனவே என் தம்பியிடம் ஒரு பேப்பரில் கதையின் பெயர், ஆசிரியர் பெயரை நான் எழுதிக் கொடுத்து எடுத்து வரச் சொல்வேன்.