

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் ஏப்ரல் 27 அன்று சேலம் அம்மாப்பேட்டை ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் திருவிழாவை வாசகியர் கொண்டாடித் தீர்த்தனர்.
மகளிருக்கான தனியொரு நாளாகத் தொடங்கிய சேலம் மகளிர் திருவிழா, சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியரின் பரதநாட்டியம், பறையிசை, ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளால் களைகட்டியது. கடலூர் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி மோகன சங்கரி நாட்டுப்புற நடனம், பரதம், சிலம்பாட்டம், சிலா ஆட்டம் எனப் பல்வேறு நடனங்களைக் கலவையாக்கி, தீச்சட்டிகளை இரண்டு கைகளில் மட்டுமல்லாமல் தலையிலும் சுமந்து ருத்ர தாண்டவம் ஆடி, பார்வையாளர்களைச் சிலிர்க்க வைத்தார். இவர், தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை நடத்திய மாநில அளவிலான நடனப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.