

பெண்கள் மயானத்துக்குச் செல்ல இன்றளவும் சிலர் அனுமதிப் பதில்லை. அவர்களுக்கு சீதாவைப் பார்த்தால் திகைப்பு எழலாம். காரணம், சேலம் மாநகரின் மையத்தில், பரபரப்பான சாலையை ஒட்டியுள்ள டிஎவிஎஸ் மயானத்தில் சீதா (38) எவ்வித அச்சமும் இன்றிச் சடலங்களை அடக்கம் செய்துவருகிறார். பலரின் வாழ்க்கைப் பயணம் முடியும் இடத்தில், இவர் தனது வாழ்க்கையை 13 வயதில் தொடங்கினார். தனது வாழ்க்கையை சீதாவே விவரிக்கிறார்: “அம்மா, சகோதரிகள் எனச் சிறு வயதில் எல்லாரையும் போல மகிழ்ச்சியாக இருந்தது எங்கள் வீடு. ஆனால், எங்கள் அப்பாவின் மதுப்பழக்கம் அனைவரது மகிழ்ச்சியையும் அன்றாடம் அடித்துவிரட்டிவிடும். தினமும் குடித்துவிட்டு வந்து, அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்து அம்மாவை அடித்து உதைப்பார். அவரது கொடுமையைத் தாங்க முடியாமல் என் அம்மா தற்கொலை செய்துகொண்டார். எங்கள் வாழ்க்கை திசைமாறிய தருணமும் அதுதான்.
மதுவுக்கு அடிமையாகிவிட்ட தந்தையுடன் பெண் குழந்தைகள் இருக்கக் கூடாது என்பதற்காகத் தந்தைவழிப் பாட்டி ராஜம்மாள் என்னையும் என் சகோதரி களையும் தன் பராமரிப்பில் வைத்துக் கொண்டார். மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்யும் பணியைச் செய்துவந்தார் பாட்டி. நான் அவருக்கு உதவ முற்பட்டபோது, எல்லாரையும் போல என்னையும் பள்ளிக்குச் சென்று படிக்க அறிவுறுத்தினார். என் அம்மாவின் மரணத்தில் இருந்து மீள முடியாததால் நான் பள்ளிக்குச் செல்லவில்லை.