

கோடை விடுமுறையின்போது குழந்தைகளின் புத்தக வாசிப்புக்காக, ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை வாலிப முஸ்லிம் தமிழ்க் கழகம் எங்கள் வீட்டுத் திண்ணையில் அமைத்திருந்த சிறிய நூலகம் எனக்கு வாசிப்பு உலகை அறிமுகப்படுத்தியயது. ஆறாம் வகுப்பு கோடை விடுமுறையில் 25 பைசா கொடுத்து அதில் உறுப்பினரானேன். அங்கு தொடங்கிய வாசிப்பு, புத்தக அடிமையாகவே என்னை மாற்றிவிட்டது.
ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு புத்தகங்கள் எனத் தொடர்ந்த வாசிப்பு, அந்த விடுமுறைக்குள் சிறியதும் பெரியதுமாக 120 புத்தகங்களை வாசிக்கவைத்தது. ஒவ்வொரு நூலும் ஒரு புதிய அனுபவம். நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், பழங்கதைகள் என எல்லாமே வாசித்தேன். ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு உலகங்களைச் சந்திக்க நேர்ந்தது. அந்தக் கதைகளில் இருப்பவர்கள் என் அருகிலேயே வாழ்ந்தவர்களாகத் தோன்றினர். நான் அவர்களுடன் சென்றேன். அவர்களுடன் சிரித்தேன். அவர்களுடன் அழுதேன். அந்த வாசிப்பு அனுபவம், என் அறிவு உலகை விரிவுபடுத்தியது. கதைகளின் மாயாஜால உலகிற்குள் நுழைந்து, என்னை மறந்து வாசிப்பதில் அலாதியான மகிழ்ச்சி அடைந்தேன்.