

தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 2024இல் எத்தனை பாலியல் குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கின்றன என்கிற புள்ளி விவரங்கள் 2025 ஏப்ரல் மாதம் தொடங்கியும் இன்னும் வெளியாகவில்லை. புள்ளி விவரக் கணக்குப்படி சொல்லப்போனால் 2022ஆம் வருடத்து அறிக்கையே தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையாக நமக்குக் காணக் கிடைக்கிறது. அதில்கூடப் பெண்களுக்கு எதிராகச் சுமார் 36,677 பாலியல் குற்றங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி என்றால் ஒரு நாளைக்கு 86 குற்றங்கள் நடந்ததாக நாம் புரிந்துகொள்ளலாம்.
பாலியல் குற்றங்களைப் பதிவுசெய்யாமல் இருப்பதற்கு இந்தச் சமூகத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. சிறுமிகளாக இருக்கும்போது தங்களுக்கு நேர்ந்தது பாலியல் வன்முறையா என்றுகூடச் சில நேரம் அவர்களுக்குப் புரிவதில்லை என்பதுதான் முதல் காரணம். ஏழாம் வகுப்பு கோடை விடுமுறையில் என்னுடைய உறவினர் வீட்டில் நீச்சல் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது அங்கு இருந்த 50 வயது நபர் ஒருவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். இதை என்னுடைய இருபதாவது வயதில்தான் நான் புரிந்துகொண்டேன். அந்தத் தொடுதல் எனக்குப் பிடிக்காமல் இருந்தபோதும் என்னால் அதை எதிர்த்து எதுவும் செய்ய இயலவில்லை. பல பெண்களுக்கு இதுவே கதியாக இருந்திருக்கிறது.