

உறவினர்கள், நண்பர்கள் என யாரும் கை கொடுக்காத நிலையில் தன்னந்தனியாக நின்று சாதித்துக் காட்டியுள்ளார் சிதம்பரத்தைச் சேர்ந்த இந்திரா. முன்னேறத் துடிக்கும் பெண்களுக்குத் தன் வெற்றியின் மூலம் நம்பிக்கை அளித்துவருகிறார் இவர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இந்திரா (43). சிறிய குடிசை வீட்டில் வாடகைக்கு வசித்துவருகிறார். இவருடைய கணவர் சங்கர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவன் இறந்த பிறகு மகனையும் மகளையும் எப்படி வளர்த்து ஆளாக்குவது எனத் தெரியாமல் திணறிப்போனார். பெரிதாகப் படிக்கவும் இல்லை என்பதால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் இருந்தார். உறவினர்கள் யாரும் இவருக்கு உதவ முன்வரவில்லை. திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட நிலையில் தவித்தபோதும், வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கக் கூடாது என முடிவெடுத்தார். பலரது வீடுகளுக்கும் சென்று வீட்டு வேலை செய்தார். அப்போதுதான் அவருக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கையின் வேரைப் பிடித்துக்கொண்டு எதைப் பற்றியும் கவலைப்படாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் காலை, மாலை இருவேளையும் வீட்டு வேலைப் பணியாளராகத் தொடர்ந்தார்.