பெண்களின் பாதுகாப்புக்கு என்ன பதில்? | உரையாடும் மழைத்துளி - 22

பெண்களின் பாதுகாப்புக்கு என்ன பதில்? | உரையாடும் மழைத்துளி - 22

Published on

கடந்த வாரம் நடந்த சில சம்பவங்கள் நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்கிற சந்தேகத்தை மட்டுமல்ல, அச்சத்தையும் ஏற்படுத்தின. பள்ளிக்கூடங்களில் படிக்கிற சிறுவயது பெண் குழந்தைகளிடம் ஆசிரியர்கள் பாலியல்ரீதியாக மிகக் கீழ்த்தரமாக நடந்துகொண்ட விதம் நம்மைப் பதற வைத்தது.

அது மட்டுமல்ல; வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஒரு கர்ப்பிணியிடம் காமக் கொடூரன் ஒருவன் தவறாக நடக்க முயன்று அந்தப் பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருந்தான். அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்த நான்கு மாத சிசு அந்தத் தாக்குதலில் தன் உயிரை இழந்துவிட்டது. உலகத்தைக் காணும் முன்பே அந்தக் குழந்தையைக் கொல்லும் அளவுக்கு அவனைக் காமம் அலைகழித்திருப்பதை அந்தச் சிசு அறிந்திருக்காது. அந்தப் பெண் தலையில் 20 தையல்களுடனும் காயங்களுடனும் மருத்துவமனையில் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார். ஜோலார்பேட்டையில்தான் அந்தக் காமுகன் பெண்கள் பெட்டியில் ஏறியதாகத் தெரிகிறது. முதலில் தான் தவறாக ஏறிவிட்டதற்காக வருந்திய அவன் முப்பது நிமிடங்கள் கழித்து ஆடையின்றி அந்தப் பெண் முன் வந்து நின்றிருக்கிறான். அந்தப் பெட்டியில் வேற எந்தப் பயணியும் இல்லை என்பது அந்தப் பெண்ணின் வாக்குமூலம்.
இதற்குப் பிறகு அடுத்த 30 நிமிடங்கள் திரைப்படங்களில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கொடூரமானவை. அவன் அந்தப் பெண்ணைப் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான். அந்தப் பெண் மிகவும் கெஞ்சி, “நான் உன் தங்கையைப் போன்றவள். கர்ப்பமாக இருக்கிறேன்” என்றெல்லாம் சொன்ன பிறகும் மனம் இறங்காமல் அந்தப் பெண்ணின் கையை உடைத்திருக்கிறான். உடனடியாக அந்தப் பெண் ரயிலின் அபாயச் சங்கலியைப் பிடித்து இழுக்க முயன்றபோது அவரை ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டிருக்கிறான். அங்கும் அவர் கைப்பிடியைப் பிடித்துகொண்டு தொங்கியதால் காலை வைத்து எத்தி கீழே விழ வைத்திருக்கிறான்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in