

எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு குடும்பத்தில் மிகப்பெரிய சண்டை அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி வேறொரு திருமணம் செய்துகொண்டு போய்விட்டதால் அவர் தன்னுடைய பால்ய சிநேகிதியை மணந்துகொண்டார். அந்தப் பெண்ணும் ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்.
வதைக்கும் சொல்: அந்தக் குடும்பத் தலைவனின் சகோதரிகள், அக்காவின் கணவர் உள்ளிட்டோர் இந்தப் பெண்ணை எப்போதுமே அவளுடைய கற்பு குறித்த கெட்ட வார்த்தையைச் சொல்லி கூப்பிடுவார்கள். எப்படி அந்தப் பெண் இதையெல்லாம் சகித்துக்கொள்கிறார் என்று நான் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால், அவர் அதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் அந்தக் குடும்பத் தலைவருடைய அம்மாவைக்கூட அவரது கடைசிக் காலத்தில் பார்த்துக்கொண்டார். ஆனால், அவர் தன் உடலை வியாபார நோக்கில் கையாள்கிறாள் என்று சில நாள்களுக்கு முன் அவர்கள் சொன்ன வார்த்தையைச் சகித்துக்கொள்ள முடியாமல் திரும்பப் பேச, அவர்கள் மீண்டும் மீண்டும் அதே வார்த்தையைச் சொல்லி அவரை வதைத்தார்கள், காயப்படுத்தினார்கள், அவமானப்படுத்தினார்கள்.