

வேலூரில் வசித்துவரும் திருநங்கையான ஜெயஸ்ரீ, தனக்கான அடையாளத்தை உருவாக்கப் போராடிவருகிறார். குறைந்த கட்டணத்தில் திருமணங்களுக்கு மணப்பெண் அலங்காரம் செய்துவரும் அவருக்கு இருக்கும் ஓர் ஆசை பெண்களுக்கான அழகு நிலையம் தொடங்க வேண்டும் என்பதுதான்.
வேலூர் சாயிநாதபுரத்தில் சாதாரணக் குடும்பத்தில் குமாரசாமி - சித்ரா தம்பதிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன்நாதன் பிறந்தார். வீட்டுக்கு மூத்த மகனாகப் பிறந்த சந்தோஷம் குடும்பத்தில் இருந்தாலும் வீட்டில் அடுத்தடுத்து இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தனர். தங்கைகளுடன் சேர்ந்து வளர்ந்த ஜெகன்நாதன் பள்ளிக்குச் சென்றபோது தனக்குள் ஏற்பட்ட மாற்றத்துக்கான காரணத்தைக் காலம் கடந்து புரிந்துகொள்ளத் தொடங்கினார். ஒருகட்டத்தில் தன்னிடம் பெண்தன்மை அதிகமாக இருந்ததால் பெண்ணாகவே மாறத் தொடங்கினார்.