விலகும் உறவுகள்; விஷமாகும் மனங்கள் | உரையாடும் மழைத்துளி - 9
இளம்பெண் ஒருவர் தன் காதலனைக் கொலை செய்த வழக்கில் கேரள நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் இந்த வாரம் பரபரப்பான ஒன்றாகப் பல்வேறு இடங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. காதல் என்கிற ஒற்றை வார்த்தை இறுதியில் மரணத்தில் முடிவடைந்து இருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. காதல் என்பதை என்னவாக இந்தச் சமூகம் புரிந்து வைத்துக்கொண்டிருக்கின்றது என்பது முதல் கேள்வி. வெகு நாள்கள் கழித்து கேரளத்தில் இளம்பெண் ஒருவருக்கு மரண தண்டனை அளித்திருக்கும் தீர்ப்பு நியாயமானதா என்பது அடுத்த கேள்வி.
விட்டு விலகுவது நல்லது: கிரீஷ்மா என்னும் அந்த இளம்பெண், மரணம் அடைந்த ஷரோன் ராஜைக் காதலித்தது உண்மைதான். ஆனால், அதற்குப் பிறகு கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதை முன்வைத்து கிரீஷ்மா, ஷரோன் ராஜை விட்டு விலக முன்வந்தபோது ரேடியாலஜி மாணவரான அவர் கிரீஷ்மாவை விட்டு விலகச் சம்மதிக்கவில்லை. தன் வாழ்க்கையிலிருந்து ராஜ் விலக வேண்டுமெனில் அவரைக் கொல்ல வேண்டும் என்று கிரீஷ்மா திட்டமிட்ட நிமிடம்தான் இந்தச் சமூகம் உற்றுப்பார்க்க வேண்டிய மிக முக்கியமான கட்டம். ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தில் வருவது போல அந்தப் பெண்ணை உபயோகித்தே அந்தக் குடும்பத்தினர் அந்தப் பையனைச் சாகடித்திருக்கக்கூடும் என்கிற ஊகமும் இந்தக் கொலை வழக்கில் இருக்கிறது.
