

நான் அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர். மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க நினைத்தேன். அதற்கு என்னைத் தயாராக்கிக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக ஃபேஸ்புக் வழியாக எனக்குப் பரிச்சயமான தோழி மூலம் ‘வாசிப்பை நேசிப்போம்’ எனும் புத்தக அறிமுக மற்றும் விமர்சனக் குழுவில் இணைந்தேன்.
கதிரவன் இரத்தினவேல் எனும் ஒற்றை நபரின் சிந்தனையில் உதித்த இக்குழு இன்று பல நூறு பேரைப் புத்தகங்களுக்குள் புதைய வைத்துள்ளது. ஒரு நாளுக்கு 20 பக்கங்களையாவது வாசித்தல் கட்டாயம் என்கிற இலக்கோடு பயணிக்கிறேன். நான் மட்டும் வாசித்து மேம்படாமல், மாணவர்களையும் அதனுள் இணைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் ‘மிஷன் டெல்டா’ என்கிற பயிற்சி, மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்கு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, எங்கள் பள்ளி மாணவர்களை வாசிப்புப் போட்டியில் கலந்துகொள்ள வைக்க ஏற்பாடு செய்தோம். ஆரம்ப வகுப்பு முதல் இந்தப் போட்டியை ஆரம்பித்தோம். புத்தகங்களின் பக்கங்கள் அதிகம் இல்லாமல் இருப்பதற்காகத் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட படங்களுடன் கூடிய சிறிய சிறிய புத்தகங்களைத் தொடக்கக்கல்வி மாணவர்களிடம் கொடுத்து வாசிக்க வைத்தோம். அதை ஒரு நிமிடக் காணொளியாகப் பதிவு செய்து ‘வாசிப்பை நேசிப்போம்’ குழுவில் பதிவிட்டோம்.
தொடக்கக் கல்வி மாணவர்களின் குறுங் காணொளிகளை யூடியூபில் பார்த்த பிற மாணவர்களும் புத்தக விமர்சனம் செய்ய முன்வந்தனர்.
இந்த வருடமும் தமிழக அரசு வாசிப்பு இயக்கத்தை உருவாக்கி மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்தும் விதமாக நட, ஓடு, பற என்பன போன்ற தலைப்புகளில் எளிய புத்தகங்களை வழங்கியுள்ளது. அது மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கிறது.
மாணவர்களிடம் சிறு உந்துதலை மட்டும் நாம் தூண்டிவிட்டால் அந்த உந்துதலால் அவர்களது உத்வேகம் பெருகி, தங்களை மேம்படுத்திக் கொள்வதோடு தங்களைச் சார்ந்தோரையும் தூண்டிவிடுவார்கள்.
- பா. விமலா தேவி, ஏரிப்புறக்கரை, தஞ்சாவூர்.