

கல்லூரியில் இளங்கலைப் பட்டம் முடித்த உடனே திருமணம், குழந்தைப்பேறு என வழக்கமான வாழ்க்கை.
ஓய்வு நேரத்தில் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் என கிரைம் நாவலில் ஆரம்பித்த பயணத்தைச் செம்மைப்படுத்தி ஜெயகாந்தன், பிரபஞ்சன், பாலகுமாரன், எஸ். ராமகிருஷ்ணன் என மேம்படுத்தினார் என் கணவர். வாசிப்பில் என் கணவர் காட்டிய எழுத்தின் சுவை இன்னும் ஆழமாக வாசிக்கும் தாகத்தை என்னுள் வளர்த்தெடுத்தது.
சமூகப் பிரச்சினைகள், தீர்வுகள், வாழ்க்கை முன்னேற்றத்திற்கான வழிகள், ஆன் மிகம், பொது அறிவு எனப் பல வகைகளிலும் என் அறிவுத்தேடல் புத்தகங்களின் துணையைக் கொண்டு சாத்தியமாயிற்று. புத்தகங்கள் எனக்குப் பல நேரத்தில் நண்பனாக, சகோதரனாக, குருவாக, ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கின்றன.
நான் இன்று ஒரு தனியார் நிறுவனத்தில் திறம்படப் பணியாற்றப் புத்தகங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. என் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை இப்போதிருந்தே அறிமுகப்படுத்தத் தொடங்கி இருக்கிறேன். அவர்களும் எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக வாழ, புத்தகங்கள் உதவும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
- சு.பூங்கொடி, பொள்ளாச்சி.