

தனது ஆறு வயது மகன் அதிக நேரம் திறன்பேசியைப் பார்க்கிறான் எனக் கவலை கொண்டனர் ஒரு பெற்றோர். அவனது திறன்பேசியைத் திறன்பேசி மென்பொருள் நிபுணரிடம் கொடுத்து அதை எளிதில் திறக்க முடியாத வகையில் செயலி ஒன்றை நிறுவச் சொன்னார்களாம். அந்த நிபுணர் கடை உள்ளே திரும்பி “ராஜா, உன்னால்தான் இவங்க சொல்ற மாதிரி பண்ண முடியும்.
வந்து போட்டுக்கொடு” என்று சொல்ல உள்ளிருந்து வந்த ராஜா அவருடைய ஐந்து வயது மகன்! பொதுவாகத் திறன்பேசிகளை அதீதமாகப் பயன்படுத்துவது நமக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்து கின்றன என்பதையெல்லாம் பார்த்தோம். அவை சிறார்களிடம் ஏற்படுத்தும் பாதிப்புகளை அறிந்து கொள்வது குழந்தை வளர்ப்புக்கு உதவக்கூடும்.
அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
அமெரிக்காவில் எட்டு வயதுக்கு முன்பே தனக்கெனத் தனியாகத் திறன் பேசி அல்லது டேப்லட் (ஐ பாட்) உள்ள சிறார்களின் எண்ணிக்கை 51% என 2026இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று சொல்கிறது. எட்டு வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் திறன்பேசியில் செலவிடுகின்றனராம்.
இதுவே ட்வீனேஜர் (Tweenager) எனப்படும் 8-12 வயதினர் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரத்துக்கும் அதிகமாகத் திறன்பேசிகளைப் பார்க்கின்றனர். பதின்ம வயதினரில் 90%க்கும் அதிகமானோரிடம் திறன்பேசிகள் இருக்கின்றன.